முகப்பு...

Thursday 16 August 2012

சுதந்திர தினம்...

சுதந்திர தினத்தன்று, விதவிதமான உணர்ச்சிகளை பகிர்ந்துகொள்ளும் பலவிதமான பதிவுகள்..சுதந்திர தினத்திற்கு மனமாற வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் பதிவுகள், மனம் ஒப்பவில்லையெனினும் வாழ்த்தியதற்காக வாழ்த்துபவர்கள், வீறுகொண்டெழத் தூண்டும் வகையிலான உணர்ச்சிமிகு கவிதைகள், சமூகத்தையும், ஆட்சியாளர்களையும் சாடும் பதிவுகள். தன்னுடைய முகநூலில் அடையாளப் படத்தை தேசியக்கொடியாக வைக்கும் சிலர், கறுப்பு தினமாக அறிவிக்கும் பதிவுகள், அதை எதிர்க்கும் பதிவுகள். அறிவுரை கூறும் பதிவுகள்...சுதந்திர நாடுதானா இது என வினாவெழுப்பும் பதிவுகள், அலட்சியமாக எள்ளி நகையாடும் வகையிலான சில பதிவுகள்...அப்பப்பா ஒரே நாளில்தான் எத்தனை விதமான பதிவுகள்..உணர்ச்சிகள்...??!!! மனிதர்களின் மனநிலைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. இன்று நம் அனைவருக்கும் ஒரே தினம் ..இருப்பினும் எண்ண ஓட்டங்கள் வெவ்வேறாக..

நம் பாரதத்தாய் நமக்கு எந்த குறையும் வைக்கவில்லையே...??!! அனைத்தும் கொடுத்திருக்கிறாள். ஒரு தாய் தன் பிள்ளைகள் அனைவருக்கும் சமமாக சொத்து பிரித்து கொடுத்து ஒருவர் வசதியாகவும், ஒருவர் வசதியின்மையாகவும் இருந்தால் அதற்கு தாய் எப்படி பொறுப்பாக முடியும்..? பிள்ளைகளின் பொறுப்பற்ற தன்மைதானே காரணம்..அதுபோல்தான், நமது தேசத்திலும் குறைகள் பல இருக்கிறது எனில் ஆட்சியாளர்கள், எனக்கென்ன என மெத்தனமாக இருக்கும் பொதுமக்களே காரணமாக இருக்கமுடியுமே தவிர இதில் பாரதத்தாய்க்கு என்ன பங்கு..? 

சுதந்திர தினத்தன்று நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நாம் மற்ற நாட்களில் நமது தேசம் என்ற எண்ணத்துடன் இதுவரை செய்தது என்ன என சிந்தித்திருப்போமா..?? இவன் ஆட்சி செய்தால் அவனைச் சார்ந்தவர்கள் குறை  கூறுவார்கள். அவன் ஆட்சி செய்தால் இவனைச் சார்ந்தவர்கள் குறை கூறுவார்கள்..பொதுமக்களாகிய நாம் பொதுவாக இருந்து என்றாவது சிந்தித்தது உண்டா..?? யார் ஆட்சி செய்து, நாம் யாருக்கு ஆதரவாக இருந்தாலும் ஏமாற்றப்படுவதும், பாதிக்கப்படுவதும், நன்மையடைவதும் நாம் தான் என்ற பொதுச்சிந்தனையுடன் எந்த விசயத்தையாவது நோக்கியிருக்கோமா..? அப்படியிருக்க சாடுவது மட்டும் ஏன்..?? முதலில் நமது தேசத்தில்..நாம் குறையென நினைப்பது, உடனடித் தீர்வு காணவேண்டிய பிரச்சினை, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினை என பிரச்சினைகளை பட்டியலிட்டு பொதுவாக அதைத் தீர்க்க போராடியிருக்கிறோமா..அல்லது முயற்சி செய்திருக்கிறோமா..ஊழலை சுட்டிக்காட்டினால் சுட்டிக்காட்டியது எந்த ஜாதி, மத, இன பத்திரிக்கை, கட்சி  என அதை விமர்சனம் செய்வோம்..அல்லது அந்த ஊழல் கண்டுபிடித்தது யார்..எந்த ஜாதி, மதம், கட்சி என பேசி பிரச்சினை திசை திருப்பியிருக்கோமே தவிர ஒரு பிரச்சினையின் தீவிரம் என்ன..எப்படி கையாளலாம்..ஏன் இதுவரை முடியவில்லை..அதற்கு தடையாக இருப்பது யார்..என்று ஆராய்ந்து ஒற்றுமையாக போராடியிருக்கோமா..?
உதாரணம் 
முல்லைப்பெரியார்..கொஞ்சநாள் அதைத்தீவிரமாக முகநூல் மற்றும் ஊடகம் என எழுச்சியாக பேசினோம்..முடிவு..??
கூடங்குளம்.: அதே நிலைதான்
கல்வியின் இன்றைய நிலை.
காவிரிப்பிரச்சினை.: 

இப்படி தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்க..எய்தவன் எங்கோ  இருக்க அம்பை நோவதேன்..? பிரச்சினை நம் பொறுப்பின்மை, ஆட்சியாளர்களின் அலட்சியம் என இப்படியிருக்க பாரதத்தாய் சுதந்திரம் அடைந்து என்ன பிரயோசனம் என கேட்கிறோம்..ஒரு பெட்ரோல் விலை உயர்வு எனில் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு வேலைநிறுத்தம் செய்து அவர்கள் கோரிக்கையை சரிசெய்துகொள்ளவில்லையா..?? லாரி ஓட்டுநர்கள் ஒரே நாளில் வேலை நிறுத்தம் செய்து தன் கோரிக்கையினை நிறைவேற்றிக்கொள்ளவில்லையா..??  நான் குறைகூறவில்லை.  ஒரு பணி சார்ந்து அவர்களிடம் உள்ள  ஒற்றுமை, தேசம் சார்ந்த ஒற்றுமை நம்மிடையே இல்லாமல் போனது நமது குற்றம்தானே..?? ஒரே நாளில் தீர்வு ஏற்படும் பிரச்சினைகள் அல்லதான் இருப்பினும்..அதன் தீவிரம் பொறுத்து நாமும் நம்முடைய முயற்சி, போராட்டம் தீவிரப்படுத்த வேண்டுமல்லவா..?? செய்தோமா.? எங்கோ நடக்கிறது என கூடங்குளப்பிரச்சினையை கண்டுகொள்ளாமல் இருக்கும் நாம். சொல்லப்போனால் அதன் முழு விளைவு, ஆபத்து இன்னும் பலருக்கு சென்றடையவில்லை என்பதே உண்மை..அதற்கு ஆதரவாக சிலர், எதிர்ப்பாக சிலர்..இப்படி நம்மிடையே முரண்பட்ட சிந்தனைகளும், போராடத்தயங்கியும், எனக்கென்ன என்று மெத்தனமாகவும் பல உணர்ச்சிகளை வைத்துக்கொண்டு பாரதத்தாயை ஏன் சாடவேண்டும்..??

நம் தாய் அந்நியர்களிடமிருந்து விடுபட்டு சுதந்திர காற்றை சுவாசித்த இந்த நாளை  இந்தியக்குடிமகளாகவும், அவளின் புதல்வி என்ற பெருமையுடனும் அவளை வணங்கி மகிழ்கிறேன்..வாழ்க பாரதம்...!!

2 comments:

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__