விரயமாகும் நேரம் எண்ணி
வேதனையுடன் ஆண்டவனை வேண்டி நிற்க..
பொக்கிசமாய் புத்தகங்கள் பலவுண்டு
படித்து நீயும் பக்குவமடை என்றே
அறிமுகப்படுத்தினான்
அரியதொரு நூலகத்தை...!
ஆன்மீகம், விஞ்ஞானம், மெய்ஞானம்..
மருத்துவமும் அறியலாம்..
கவிதையு, கட்டுரை, கதையென
பல தகவல்கள் கிடைக்கு மிங்கே...
சுவாசமறியவும், சுயமறியவும் - தூண்டும்.
மகத்துவம் வாய்ந்த புத்தகமும் உண்டு..
படித்தால் நீ ஞானியுமாகலாம்..!
பார்ப்பதற்கே காலமில்லை
அத்தனையும் படிப்பதெங்கே..?
என் மனம் பண்படுவ தெப்போது.. !! ?
புத்தகங்களைப் புரட்ட புரட்ட..,
மனமும் எள்ளி நகைத்தது எனை நோக்கி..
அரிய பல நூல்கள் இருக்கு இங்கே..
நீ அறிய விரும்புவது எது வென வினவ..
எனக்குத் தேவை எதுவென அறிய..
வாசகர்களை வரவழைக்கும் நூலகமே..
நீயே விளக்கு..என் குழப்பத்தை விலக்கு..!
நூலகம் என்னிடம்
நூறு வகை நூல்கள் உண்டு..
உன்னையறி.. உன் விருப்பமறி.. என உரைக்க..
நூலகமாய் இருந்திடத்தான் ஆசையெனக்கு
ஆனால்......
நூறு வகை புத்தகத்தைக்கூட படித்திராத
நான் எப்படி.............??!!
சரி..
நூலகமாய் வேண்டாம்..
ஒரு நூலாகவாவது இருக்கலாமே...?
இதுவும் பேராசைதான் உள்ளம் அறிவுறுத்த..
நூலாக வேண்டாம்..
ஒரு நூலையாவது படிக்க எண்ணி..
கவிதையெனும் புத்தகமொன்றைக் கையிலெடுத்தேன்..
உன்னால் முடியும் படியென.,
குறுநகை புரிந்தது நூலகம்...
கவிதையை அறிந்திட எண்ணி
புத்தகத்தைப் புரட்ட புரட்ட...
முழுவதும் படித்து முடிப்பதற்குள்ளேயே..
சிந்தனைச் சிறகுகள் வெட்டப்பட்டு..
எதுகை,மோனை
உவமான, உவமேயம் ஏதுமின்றி
முற்றுப் பெறுகிறது கவிதை...
முடிவறியாமலேயே....!
புத்தகத்தை முழுமையாய் அறிந்திடமுடியா சோகத்தில் நான்...!
ஒரு புத்தகம் கூட முழுமையாய் படிக்காதவரை..
வாசகியாய் அடைந்த சோகத்தில் நூலகம்..
தன்னிடமுள்ள நூல்களை பலரும்
படித்துப் பயனடைய வேண்டுமென..
விருப்பமுள்ள வாசகனுக்காய்
வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறது
நூலகம்...!
அடுத்தப் பிறவியிலேனும்
பொக்கிசமான நூலகத்தில்..
புத்தகமாய் இருப்பேனா...?
புத்தகத்தை முழுவதுமாய் படிப்பேனா ..??
ஏக்கமுடன் நான்....!