முகப்பு...

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, 23 May 2020

நிலவின் நிழல்..

நிலவின் நிழல்..

நிலவின் நிழலில் 
உறங்கச் செல்ல... 
அங்கே என்னவன் அமர்ந்து
வசீகரப்புன்னகை வீச.. 
நித்திரையை   
நிலவுக்கு  வழங்கி.. 
என்னவனை  சுவாசிக்கத் துவங்குகிறேன். ❤

Wednesday, 9 May 2018

யாதுமானவன்...



என் 
அன்பு, பாசம், நேசமும் நீ..
கோவம், வெறுப்பும் நீ...!
மகிழ்ச்சியும் நீ..
வருத்தமும் நீ..!
வலியும் நீ..
ஆறுதலும் நீ..!
நோயும் நீ..
மருந்தும் நீ..!
பலமும் நீ,,
பலவீனமும் நீ..!
வெற்றியும் நீ..
தோல்வியும் நீ..!
படிக்கல்லும் நீ..
என் சொல்லும் நீ..!
மௌனமும் நீ..!
என் சிந்தையும் நீ..
செயலும் நீ...!
எண்ணமும் நீ...
எழுத்தும் நீ...!
என் பாடுபொருளும் நீ..
நான் பாடும்பொருளும் நீயென..
என் சிந்தையை சிறைபிடித்து
யாவ/ற்றிலும் நிறைந்து.,
யாதுமானவனாகிறாய்..!

Sunday, 17 May 2015

மௌனத்தை நோக்கி....!!


காதல் கசிந்துருகி, மனதைக் கனியவைத்து
என் உள்ளம் களிப்படையச்செய்த
தமிழ்க் கவிதைகளைக் காணவில்லை…!
என் கோவம் கொன்று, மனதை வென்று
முகத்தோட்டத்தில்
மகிழ்ப்பூவை மலரச்செய்த
அவன்
அன்பு வார்த்தைகளைக் காணவில்லை…!!
ஐயிரண்டு விரல்களால்
அவனை ஆரத்தழுவி ஆறுதல் கூற…
சொல்லொனா சோகத்தை
வெளிப்படுத்திய
துயர வார்த்தைகளைக் காணவில்லை..!
மனம் வலுவிழக்கும் நேரத்தில்
பலமாய் நானிருக்கிறேன் - எனும்
நம்பிக்கை வார்த்தைகளைக் காணவில்லை..!!
சாதிக்கவேண்டுமென
சபதமேற்க வைக்கும்
அவன்
எழுச்சிவார்த்தைகளைக் காணவில்லை…!!
என் எண்ணங்களுக்கு வண்ணம்சேர்த்து
எழுத்தோவியமாய்ப் படைக்க
சிந்தனைகளைத் தூண்டிவிடும்
உற்சாகவார்த்தைகளைக் காணவில்லை..!
உற்றதோழனாய் நானிருக்கிறேன் - என்ற
நட்புவார்த்தைகளைக் காணவில்லை…!
ஊடலுக்கும், கூடலுக்கும் பாலமாய்..
மனதினில் எண்ணி எண்ணி
மந்தகாசப் புன்னகையை தோற்றுவித்து
உரையாடலைத் தொடரும்
காமம் கலந்த காதல் வார்த்தைகளைக் காணவில்லை…!!
அன்பு, காதல், நட்பு, பாசம்
காமம், குரோதம், பகை..
வெறுப்பு, மௌனம் என
எண்ணற்ற உணர்வுகளை
வார்த்தையில் வடித்தெடுத்த
காலமும் சென்றதோ…?!
உணர்வுருக்கள் உதவியுடன்
உணர்வுகளை வெளிப்படுத்தியே
பறந்துதிரிந்த சிந்தனைச் சிறகுகளை
வெட்டி வீழ்த்தி..
வார்த்தைகளை வற்றச்செய்ததோ…
வரமாய் வந்த உணர்வுருக்களுமே..??!
வார்த்தைகளைத் துறந்து வடிவங்களைப்பகிர்ந்து
நிரந்தர மௌனத்தை நோக்கிய பயணமோவிது..??
உணர்வுருக்களின் வருகை வரமா..?! சாபமா..?!

Thursday, 14 May 2015

தேவை ஒரு முகமூடி..!!

நேசத்திற்குரியவரை
அன்புமலர்களால் அர்ச்சிக்க...
நிராகரிக்கப்பட்டு 
குப்பையில் வீசப்பட்ட மலர்கள்
வழியும் விழிநீரில்
வதங்காது பாதுகாக்க.,
அம்பென வீசப்பட்ட
அலட்சிய வார்த்தைகள்
இதயத்தைக் கிழித்துக் கொணரும்
இரத்தவாடை 

மலரின் மணத்தை மாற்றாதிருக்க...
பாசமென பாசாங்கு செய்வோரின்
வேடத்தை அறிந்தும்
அறியாமலிருக்க..

இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகம்
மறந்திட...

நறுமணமிக்க புன்னகை மலரை
நிரந்திரமாய் அணிந்து
வலிமறைத்து வலம் வந்திட
தேவை ஒரு முகமூடி..! smile emoticon 

Saturday, 25 April 2015

‪இதய_அரங்கு‬...!!



மனதாளும் மன்னவன் 
இதழ் திறவாது..
உணர்வுகளை உணர்ந்து
அவனை உள்வாங்கி
உணர்வுகளால் ஒன்றியதையெண்ணி
மனமொத்த மனமது வரமென
இறுமாந்திருக்கும் வேளையில்..

அனுபவ முட்கள்
கிழித்த வலியில்
இரத்தம் கசிய
மனம் வாடியிருக்கும் கொற்றவனை
காதலில் கசிந்துறுகும் காரிகை...

வாஞ்சையாய் வாரியணைத்து
வார்த்தைகளால் ஆறுதல் சமைத்து
அவனுக்கு
அமைதியைப் பரிமாறிட
எண்ணியிருக்க..

மனமொத்த மனமது
உரைக்காத போதும்..
அவன்
உணர்வுகளால் உந்தப்பட்டு
வலிகளை உள்வாங்கி
கொந்தளிக்கும் மனம்...
வார்த்தைகளை வற்றச் செய்திட..

வசமிழந்த வார்த்தைகளை சபித்து
மௌனத்தை
மொழிபெயர்க்கத் தெரிந்தவனுக்கு
மௌனமாய்
மௌனத்தால்
மருந்திடுகிறேன்
மனதினால்..!

மனமொத்த 
உணர்வுகளையடைந்தது
வரமா...? சாபமா..?
பட்டிமன்றம் நடத்தப்படுகிறது
என் இதய அரங்கில்...!

Sunday, 19 April 2015

ஆன்மாவின்_அமைதி‬..!!


காலனை 
கரம் பிடிக்கும் தருவாயிலும் 
உன்மடிமீது உயிர்துறக்க விரும்பியவளின் மரணத்தை..
எங்கோ நடக்கும் 
எனக்கான இரங்கல் கூட்டத்தில் அறிகிறாய்..!
என்னவனே
நீயறியாது என்னுயிர் பிரியாதென்றாயே..!
நாம் ஆடிய
கண்ணாமூச்சியாட்டத்தில்...
காலனடைந்த வெற்றியை
நீ சிந்தும் கண்ணீர்த் துளிதான்
மாற்றிடுமா...?!
எப்படியிருந்தாலென்ன. .
எனக்காக நீ சிந்தும்
ஒற்றைத்துளி கண்ணீரும்
என் ஆன்மாவைக் குளிர்விக்கும்
அடைமழையென மகிழ்ந்து
அமைதி கொள்கிறேன்...!! smile emoticon

Thursday, 5 February 2015

அவனதிகாரம்...!!

‪#‎அவனதிகாரம்‬...
என் மனத்தோட்டத்தில்
அவனுக்காக விதைத்த
காதல் விதைகள்
விருட்சமாய் வளர்ந்திருக்க...
கனிகளைப் பரிமாறிடும்
வார்த்தைப் பாத்திரங்கள்
வறண்டு
வழியறியாத
என் தவிப்பை
விரும்பாதவனாய்..
மனத்தோட்டத்தில்
அவனுக்காய்
கனிந்திருக்கும்
காதல் கனிகளை
கண்கள் வழி சுகித்து
எனை
களிப்படைய செய்ய
என் மனதாளும் மன்னவன்
அவனுக்கே சாத்தியமாகிறது. smile emoticon

Monday, 2 February 2015

இல்லாள்...


உனக்கான எண்ணங்களை 
எந்தன் ஓரப்பார்வையில் சுமந்து
ஒற்றைப்புன்னகையில் வெளிப்படுத்த...
என் மௌனத்தையேயறிந்த 
உனக்கு
புன்னகையை புரிந்துகொள்வதா கடினம்..??!

காதலின் அச்சாரமாய்
மலர்க்கூடையேந்தி மன்னவன்
உன் வரவுக்காய்
கதவருகே நானும் காத்திருக்க...

பளபளக்கும் பட்டுச்சேலையும்
அணிந்திருக்கும் வளையல்களும்
அகத்தாள்பவனின் அருகாமையை 
நோக்கியிருக்க..

மனதாளும் மன்னவனே..
பேதையெனை பரிதவிக்கவிடாது
விரைந்திடுவாய்...
இல்லாளின் இன்முகம் கண்டிடவே..!  

Friday, 18 July 2014

மழலையர் உலகம்..


மழலைகள் தேவதைகள்தாம்
மறுக்கவில்லை..
அவர்கள் வாழும் உலகம்
தேவதைகளால் மட்டும் ஆனதல்ல..!
தேள்களும், தேனீக்களும்
மனிதநேயம் கொண்டவர்களும்,
மனநோயாளிகளும் கலந்துவாழும்
உலகமென்பதை மறக்கவேண்டாம்...!
நேர்மறையென்னும் 

கவிதை கூறியே
கற்பனையில் வளர்க்காது
எதிர்மறையும் இருக்குமென்ற
யதார்த்தம் கூறியே..
தேவதைகள் சாத்தான்களை
எதிர்கொள்ளும் மன சக்தியை
கொடுத்தே இயல்பாய் வளர்ப்போம்..!!

Tuesday, 1 July 2014

காதல் கிறுக்கல்...

தன்னையும், என்னையும் 
எண்ண நேரமில்லா நீயும்..
உன்னையே எண்ணும் நானும்...
வார்த்தை தவிர்த்து..
மௌனத்தில் மனம் பகிர்ந்து...
கண்களில் காதல்பேசி..
நாலாறுமணியும் நகராதமர்ந்து...
இருமனம் ஒன்றாகிக் கனியும்
காலத்தை எதிர்நோக்கியேக்
காத்திருக்கும் காதல்..!! 


*********
அறிவுச்சிறையிலிட்டாலும்
மனக்கதவை உடைத்து
வார்த்தைக்கு
முற்றுப்புள்ளிவைத்து
சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறது
கண்ணீர்முத்துக்கள்...!! 

*******

Wednesday, 18 June 2014

புதியதோர் உலகம் அமைப்போம்..!!

மூச்சையடக்கி கல்விக்கடலில் மூழ்கியே
அறிவுமுத்தை அள்ளியெடுக்க 
விழைந்திடும் குழந்தைகளுக்கு வழங்கிடாது...

வணிக உலகிலே
அதிகவிலைகொடுக்கும் வணிகருக்கே
அள்ளிவழங்கி...
வாழ்க்கையை வணிகமாக்கும்
கல்வித்தந்தையில்லா..
புதியதோர் உலகையமைப்போம்...!!

மனிதம் துறந்து,
உணர்வுகள் மரத்து
மனிதனை மனிதன் கொன்றே
முன்னேற விரும்பிடாத 
புதியதோர் உலகையமைப்போம்...!!

இறைக்கு  நிகராம்
மருத்துவருமே
மனம் நெகிழ்ந்து
யாவர்க்கும் சமமான மருத்துவமளித்து
மனிதம் போற்றிடும் மகத்தான
புதியதோர் உலகையமைப்போம்...!!

பிரபஞ்சத்தின் புனிதமாம்
தாய்மை மதித்து..
பெற்றோரை வணங்கி பேணிக்காத்தே
காப்பகமில்லா...
புதியதோர் உலகையமைப்போம்...!!

இயற்கையைப் போற்றிப்பாதுகாத்திடும்
மனங்கள் நிறைந்த
புதியதோர் உலகையமைப்போம்...!!

வாழ்க்கைத்தோட்டத்தில்
அன்பு,பாசம், மனிதமெனும்
அரியமலர்கள் அனைத்தும்
நறுமணம் வீசிடச்செய்யும்
புதியதோர் உலகையமைத்திடவே
தொடரும் எம் பயணத்தில்
இணைந்தே பயணிக்க
இன்முகத்துடன் அழைக்கின்றேன்...
இணைந்த கரங்களுடனே
இன்னல்களை எதிர்கொள்வோம்..
எங்கும் மகிழ்ப்பூ மலரச்செய்யும்
புதியதோர் உலகையமைப்போம்...!!

Thursday, 13 March 2014

புதிராட்டம்...!!


ஊருக்கு நேரணி
உள்ளுக்குள் எதிரணி...
உள்ளுக்குள் நேரணி,
ஊருக்கு எதிரணி..
எதிரணியும்,நேரணியும்
ஓரணியென...

நேரணியும், எதிரணியும்
ஓரணியுமாய்..
அன்றாட ஆட்டத்தை
அற்புதமாய் அறங்கேற்றுகிறது..
தம் தம் இடம் அறியாமலே..!!

நேரணியா, எதிரணியா
இவ்வணி எவ்வணியென
உள்ளம் எழுப்பும் கேள்விக்கு
உள்ளார்ந்து கிட்டாது
புதிராகக் கிட்டிடும் விடையுமே..!!

ஆடும் அணியினரே அறிந்திடாத
புதுமையான ஆட்டமிதில்...
வெற்றியும், தோல்வியும்
ஆட்டத்தையாடும் அணியினருக்கல்ல
ஆட்டுவிக்கும் படைத்தவனுக்கே..!!

இப்புதிராட்டம்
முடிக்க விரும்பிடினும்
தொடருகிறது
வாழ்க்கை மைதானத்தில் ..!!

Tuesday, 18 February 2014

முது(தனி)மை...!!

சுறுங்கிய தோலும்
இடுங்கிய கண்ணும்
நடுங்கும் கரங்களுடன்
வயோதிகத்திலும் 
சோறுவடிக்கும் - இவள்
அன்று பெய்த பாசமழை
விழலுக்கு இறைத்த நீராய்
வீணாகிப்போனதோ இன்று..??!!

தாய்க்கும் தாரத்திற்குமான
இடைத்தேர்தலில்
வெற்றிகொண்ட தாரத்தின்பொருட்டு
தரணியில் இவளும்
தனித்து விடப்பட்டாளோ
மனிதம் தொலைத்தவர்களால் ..??

இன்றும்..
விரும்பியவனை எண்ணியே
வெந்து தணிகிறாளோ ..?!

தனிமையை விரும்பியேற்ற இவளும்
வீட்டிற்கு வந்தவள்
வீதியிள் விட்டாளென
விருது வழங்கினாளோ..??

வெந்ததைத் தின்றே
விதிநோக்கியிருக்கும் இவள்
வீதியோரத்தை வீடாக்கிக்கொண்டாளோ..?

விதியோ..?
சமூகத்தின் சதியோ..?

விதியையும், சதியையும் முறியடிக்க
முதுமையிலும் போராடும்
இவள் போராட்டத்தின்
வெற்றிதான் எதுவோ..??!

இவளின் வெற்றிகண்டிடவே
விரும்பியழைக்கிறேன்
மனிதம் தொலைத்தவர்களை
மறுபரிசீலனை செய்திடவே...!

Saturday, 15 February 2014

எழுதப்படாத கவிதை...!!

என்னுள் இருந்து 
என் எண்ணங்களை ஆட்சிசெய்யும்
என்னவனைக் கவிதையாய் வடித்திட
உருகும் மனத்துடன்
விடியும் ஒவ்வொரு நாளும்
விரும்புகிறேன்..!!

வார்த்தைகள் 
வசப்படாது வஞ்சனை செய்திட
மனதாளும் மன்னவனை
வார்த்தையில் அடக்கிடவும் இயலுமோ..?

மனதைச் சுண்டியிழுத்து
நாடி, நரம்புகளை புடைக்கச்செய்து
எங்கோ இருந்தபடி 
எனை வீணையாய் மீட்டும்
ஆழி அலையின் ஓசையாய்
ரசிக்க வைக்கும் கம்பீரக் குரல்...

மனதிற்குள் மறைந்திருந்து
நான் விழிமூடும் நேரத்தில்
கதிரவனையே கூசச்செய்யும்
பார்வையுடன்..
மின்னலும் வெட்கி விலகும் 
பிரகாச முகத்தின் நர்த்தனம்...!

தரணியையே கரங்களில் அடக்கி
எதிரியையும் வசப்படுத்தும்
பிரபஞ்சம் பிரமிக்கும் 
கூறிய அறிவு...!

குளிர்ந்த நிலவாய் 
தோற்றத்தில் அமைதி...!

என்றும் 
படைசூழ பவனிவரும் அழகு...!

என் இதயத்தில் 
ஆயுள் தண்டனையனுபவிக்கும்
அன்புக் கைதி...!!
சுறுசுறுப்பில் எறும்பு.. 
மனோபலத்தில் யானை...
சிந்தனையின் சிற்பி...

அந்தக்காலனையும் 
என்னருகே அண்டவிடாத 
உன்னருகாமை...!!

பாடுபொருள் 
பலவாயிரம் இருந்திடினும்
பார்க்கும் பொருளெல்லாம் 
நீயே பாடுபொருளாகிட..

எழுதிவைத்த வார்த்தைகளுமே
எண்ணத்தைப் பிரதிபலிக்காது போக..
ஏமாற்றத்துடன் 
எழுதப்படாத கவிதையினை
எண்ணத்தில் சுமந்தபடியே 
கவிதைவடிக்கும் வார்த்தைகளும்
வசப்படும் நேரத்திற்காய் 
காத்திருக்கிறேன்...!!


Tuesday, 11 February 2014

தேடல்...

அடர்ந்த இருள் 
அமைதியைத் தன்வசப்படுத்தியிருக்கும் 
அதிகாலை நேரம்...
கன்னம் தழுவி மனதை வருடும்
குளிர்ந்த தென்றலுடன்
பயணிக்கும் மலரின் மணம்...
நட்சத்திரமில்லா ஆகாயம்..
சலனமில்லா வீதி..
சிந்தனைகள் சிறகடித்து
எண்ணங்களை மெருகேற்றி..
மனச்சாட்சியிடம் நேர்காணல்..!!

அத்தனையும் அனித்தியமென உணர்த்த...
காலை நேரத்தைக் கைதுசெய்து 
இருளையகற்றி..
தென்றலைத் துரத்தி..
ஆகாயத்தில் ஆதவன் 
ஆட்சியமைக்க..!!

அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்
வாகனங்கள்..
உதிர்ந்த மலராய் உறக்கத்தில் நடக்கும்
பள்ளிக் குழந்தைகள்..!!
மனச்சாட்சியின்  நேர்காணல்
ஒத்திவைக்கப்பட்டு
அடுத்தடுத்து தொடரும் 
அன்றாடப்பணிகள்..!!

எது அனித்தியம் எது சத்தியம்
எடுத்துரைப்பது யார்..?
எடுத்துக்கொள்வது எப்படி..
எத்தனையெத்தனை கேள்விகள்
எழுந்திடினும்..
விடையறியாமலே விடிகிறது
ஒவ்வொரு நாளும்..!!

Sunday, 26 January 2014

விடிதல் நன்று...!!

குழந்தையின் அழுகைக்கு - விடிதல்
அன்னையின் அரவணைப்பில்..
மாணவனுக்கு - விடிதல்
தேர்வு முடிவினில்..
ஆசிரியருக்கு - விடிதல்
மாணவர்களின் தேர்ச்சியில்..

குழந்தைத்தொழிலாளிக்கு - விடிதல்
தரமான கல்வியில்..
வறுமைக்கு - விடிதல்
வசதியில்..
அனாதைக்கு - விடிதல்
நல்லோரின் ஆதரவில்..

வணிகனுக்கு - விடிதல்
வியாபார லாபத்தில்..
எழுத்தாளனின் - விடிதல்
அவனுக்கான அங்கீகாரத்தில்..
பேச்சாளனுக்கு - விடிதல்
காதைப்பிளக்கும் கரகோஷத்தில்..

ராணுவ வீரனுக்கு - விடிதல்
எதிரியை வெற்றிகொள்கையில்..
கூலித்தொழிலாளிக்கு - விடிதல்
நிரந்தர வருமானத்தில்..
தனிமைக்கு - விடிதல்
நல்ல தோழமையில்..

விவசாயிக்கு - விடிதல்
நல்ல விளைச்சலில்..
நோயாளிக்கு - விடிதல்
தரமான மருத்துவத்தில்...
முதுமைக்கு - விடிதல்
மனிதத்தின் ஆதரவில்...

தெருவோரம் வசிப்போர்க்கு - விடிதல்
வசிப்பதற்கான ஒரு குடிசையில்..
தேவைகள் நிறைந்த புவிதனில்..
அவரவர் எதிர்பார்ப்பில்
விடிதலை நோக்கியப் பயணமுந்தான்
நாளும் தொடர்கிறதே..!

மனிதனின் முடிவாம் மரணம்..!

மரணத்தின் விடிதல் நன்றாம்
ஆன்மீகம், விஞ்ஞானம், மெய்ஞானம்
அறிந்தோரிருக்கும் அவனியிலே..
மரணத்தின் விடிதல்
அறிவோரும் உளரோ...?!

Friday, 24 January 2014

வார்த்தை (விதை)கள்...!!

இனிப்பு, புளிப்பு, கசப்பு
காரமெனப் பல்சுவை
வார்த்தைப் பரிமாற்றத்தில்...!

பிடித்த சுவை இனிப்பென
பரிமாறிட..
இனிப்பில் ஒவ்வாமை இருக்கென
காரத்தையே
தேர்ந்தெடுத்திட்டால்
பரிமாற மறுத்திடத்தான் முடியுமா..?

விரும்பியவர்
விருப்பத்திற்காய்
காரம் பரிமாறப்படுகிறது
விரும்பியோ, விரும்பாமலோ..!!

காலமது செய்யும் கோலத்தில்
இனிப்பாய் வழங்கிடும்
வார்த்தையுமிங்கே
கசப்பாய்த் தோன்றி
வெறுப்பாய்  மாறிடுது....!!

இனிப்பாய் இருந்திடக் கொடுத்திடும்
கசப்பு வார்த்தையும்
புளிப்பாய்த் திகழ்ந்திடுதே
புவிதனில்...!!

இனிப்பு,கசப்பு,புளிப்பு
காரமென பல்சுவையும்
வரக்கூடும் வார்த்தைப்
பரிமாற்றத்தில்...!!

பரி(கிர)மாறப்பட்ட
வார்த்தை ஒன்றெனினும்
சுவைக்கப்படும்
வார்த்தையின் “சுவை”
அவரவர் எண்ணத்திலன்றோ...!!

Thursday, 23 January 2014

மௌனப்பயிர்கள்...!!


நேற்று..
மனதில்
தேனைப் பாய்ச்சிய வார்த்தைகள்
இன்று
அமிலத்தை வார்க்கலாம்...
அமிலத்தை வார்க்கும் வார்த்தைகள்
நாளை
தேனைப் பாய்ச்சலாம்....

இங்கு
நிரந்தரமில்லா
தேனும், அமிலமும்
மாறி மாறி பாயும் - மனதை
தேனில் மயங்க(கி)விடாமலும்..
அமிலத்தில் கருகிவிடாமலும்
பாதுகாக்க..
மனத்தோட்டத்தில்
மௌனப்பயிர்கள்
பயிரிடப்படுகின்றன...!!

மனிதனுக்கு
மௌனப்பயிர்களின்
அறுவடை நேரம்வரை காத்திருக்க
அவகாசமில்லை ...

சிலநேரம்
அறிந்தோ அறியாமலோ
பரித்தெறியப்படுகின்றன பயிர்கள்
அரை- குறையாய்...!

மீண்டும் மீண்டும்
மௌனப்பயிர்களை பயிரிடும் முயற்சிகள்
தொடர்கின்றன...!! :)


Sunday, 19 January 2014

மரண தாகம்...!!


மரணத்தைத் தழுவத் துடிக்கும்
சிந்தனையை 
சிறைவைக்கிறேன்...!!

படைசூழ பவனிவந்து
அரியாசனத்தில் அமர்ந்து 
ஆட்சிசெய்யும் நீ 
ஏதேனும் ஓர் நொடி 
தனித்திருக்கக்கூடும்..!

மர(றந்)த்துப்போன 
உன் உணர்வுப்பூக்கள்
புத்துயிர் பெற்று..
அன்பின் ஆழத்தை உணர்ந்தமனம்
நின் கண்மலர்களில்
கண்ணீர்த் துளிகளை 
மலரச்செய்யலாம்..!

செந்நீராய்க் காட்சியளிக்கும்
நின் கண்ணீரைக் காணும் மனவலிமை
எனக்கு மட்டுமல்ல
என் ஆன்மாவிற்கும் இல்லையென்பதால்..

என்னவளே(னே)
சிந்தனை உளிகொண்டு
நீ செதுக்கும் இலட்சிய சிற்பத்தை
எங்கோ ஓர் மூலையில் இருந்தேனும் - தரிசிக்க
மரணத்தின் மீதான தாகத்திற்கு
மரணதண்டனை விதிக்கிறேன்..!!

நித்தமும் மார்கழி...!!!


வண்ணக்கலவையில்
வகை வகையாய் கோலமிட்டு
வீதிமகளை அலங்கரித்த
காரிகைகள் காணவில்லை..!

பூமித்தாயை அலங்கரிக்க
மார்கழி போதுமென
ஐயாறு திங்களுக்குள்
அடக்கியது யாரோ..?

அழகுக்கு அழகுசேர்க்க
ஆயுளும் போதாதே..
பசுஞ்சாணி சேர்த்தே
நித்தமும் நீர்தெளித்து
பளபளக்கும் வாசலிலே
வெண்மைப் பளிச்சிட
அரிசிமாக்கோலமிட்டு..

வண்ணக்கலவையினால்
வானவில்லும் பொறாமைகொள்ள
ஈராறு மாதமும்
இன்முகத்துடன்
வாசலை அலங்கரித்தே
புவிதனை மகிழ்விக்க
பூவையரே புத்துணர்வுடன்
வாருமிங்கே..!