முகப்பு...

Friday 11 December 2015

“மகாகவி பாரதியின் 134 வது பிறந்தநாள் விழா - கவிதைப் போட்டி.”

தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் “மகாகவி பாரதியின் 
134 வது பிறந்தநாள் விழா கவிதைப் போட்டி.”


ன்புத் தோழமைகளுக்கு,


மிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கம். தாங்கள் அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ”மகாகவி பாரதியின் பிறந்தநாளை” முன்னிட்டு ”தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும்” கவிதைப் போட்டியினைத் தங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறோம். தோழமைகள் அனைவரும் பெருமளவில் பங்குகொண்டு போட்டியினை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
கவிதை போட்டி விதிமுறைகள்:
1. தலைப்பு : தாங்களே தங்களால் படைக்கப்படும் கவிதைக்குப் பெயரிட்டு அனுப்பலாம்.
2. கவிதையின் தன்மை: தங்களால் எழுதப்படும் கவிதை எந்தவகையினைச் சார்ந்தது என குறிப்பிடவும். (உ.ம்) புதுக்கவிதை, மரபுக்கவிதை,
3. 20 வரிகளுக்குக் குறையாமலும் 50 வரிகளுக்கு மிகாமலும் இருக்கவேண்டும்.
4. கவிதை வேறு எந்த போட்டிக்கோ, இதழுக்கோ அனுப்பப்பட்டதாகவோ அல்லது வேறு எங்கும் பதிவிடப்பட்டதாகவோ இல்லாமல், தமிழ்க்குடிலின் இந்தப்போட்டிக்காக மட்டுமே பிரத்தியேகமாக எழுதப்பட்டவையாக இருக்கவேண்டும்.
5. ஒரு கவிஞர் ஒரு கவிதை மட்டுமே அனுப்பவேண்டும்.
6. உங்களுடைய சொந்த படைப்பாக இருக்கவேண்டும்.
அனுப்பவேண்டிய முகவரி
படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 25.12.15
படைப்புகள் tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பிவைக்கப்படவேண்டும். குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது. முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்.
பரிசு விவரம்:
முதல் பரிசு: தமிழ்க்குடில் வழங்கும் நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்.
இரண்டாவது பரிசு: தமிழ்க்குடில் வழங்கும் நினைவுப்பரிசு
மற்றும் சான்றிதழ்.
மூன்றாவது பரிசு: நூல் மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்.
இதை போட்டி என்று மட்டுமே எண்ணாமல், நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கொள்ள வேண்டுகிறோம்.நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்ந்து அனைவரும்
ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் உங்களுடன்,
-தமிழ்க்குடில்.

Thursday 3 December 2015

கடலூர் நிவாரணப்பணியில் தமிழ்க்குடில் அறக்கட்டளை



அன்புத்தோழமைகளுக்கு தமிழ்க்குடிலின்அன்பான வணக்கம்.

இயற்கையின் விளையாட்டில் பாதிக்கப்பட்ட நம் மக்களுக்காக நம்மால் இயன்ற அளவு உதவிசெய்திட இருக்கிறோம். முதல் கட்டமாக கடலூர் மக்களுக்கு நம் கரங்களை நீட்டிட எண்ணி நம் பயணத்தைத் துவங்கியிருக்கிறோம். இச்செயலில் தங்களையும் இணைத்துக்கொள்ள விரும்பும் அன்புள்ளங்கள் தொடர்பு கொண்டு உதவிட வேண்டுகிறோம். உங்களின் ஒவ்வொரு சிறுதுளியும் எங்கோ இருக்கும் நம் சகோதர சகோதரிகளுக்குப் பயன்படும் என்பதால் தங்களுடைய ஒத்துழைப்பையும் வழங்கிட வேண்டுகிறோம்.  தமிழ்க்குடில் அன்பர்கள் இன்று நிவாரணப்பொருட்களோடு கடலூருக்கு சென்றுள்ளனர். 
நம் பயணத்தில் தொடர்ந்து கரம் கோர்த்து வரும் அனைவருக்கும் நன்றியும், மகிழ்ச்சியும்.
என்றென்றும் அன்புடன்,
தமிழ்க்குடில்

தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்திய ஜூலை மாத போட்டி முடிவுகள்


அன்புள்ளங்களுக்கு,
தமிழ்க்குடில் அறக்கட்டளை நிர்வாகியின் அன்பு வணக்கம்.
ஜூலை மாதம்’2015 மறைமலையடிகளாரின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்திய சொற்பொழிவு போட்டி மற்றும் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு கட்டுரைப்போட்டியின் முடிவுகளை தங்களிடம் பகிர்வதில் மகிழ்வடைகிறோம்.
போட்டியில் பங்குகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்துக்கொள்கிறோம். வெற்றிபெற்றவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளை நிர்வாகத்தின் சார்பாகவும், நடுவர் மறை. தி. தாயுமானவன்(தவத்திரு மறைமலையடிகளார் அவர்களின் பேரன்) அவர்களின் சார்பாகவும், நம் தமிழ்க்குடில் அங்கத்தினர்கள் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறோம்.
முடிவுகளை அறியும் முன்பு போட்டிகளின் வெற்றியாளர்களைத் தேர்வு செய்த நடுவர் அவர்களைப் பற்றி தங்களுக்காக சிலவரிகள்.
”உயர்திரு மறை. திரு. தாயுமானவன்” அவர்கள் தவத்திரு மறைமலையடிகளார் அவர்களின் பேரன் என்பதில் நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே. இவர் நடுவனரசு பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தில்((Combat Vehicles Research Development Establishment Min-of-Defence ) பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ் மொழி நலன்களைமுதன்மையாகக் கொண்டு பாடுபடும் தமிழ்த்தொண்டர். அடிகளாரின் கொள்கைகளில் பெரிதும் ஈர்க்கப்பட்டு எழுத்திலும், பேச்சிலும் தனித்தமிழை பயன்படுத்துபவர். ”மறைமலையடிகளாரின் நோக்கில்” உடல்நலம் என்னும் தலைப்பினை ஆய்வுப்பொருளாகக் கொண்டு ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர்(எம்.பில்) பட்டம் பெற்றுள்ளார். அடிகளாரது வாழ்வில் நடைபெற்றௌ இன்றியமையாத செய்திகள் கடிதங்கள் இவற்றை உள்ளடக்கி “தனித்தமிழ் இயக்கத்தந்தை மறைமலையடிகளார்” என்னும் நூலை எழுதியுள்ளார். இவரது சமூகப்பணி மற்றும் தமிழ்ப்பணிகளுக்கிடையில் நம் தமிழ்க்குடிலின் வேண்டுகோளை ஏற்று சிறந்த பரிசுக்குரிய படைப்புகளைத் தேர்வு செய்து தந்தமைக்கு மனமார்ந்த நன்றியினை நிர்வாகம் சார்பாகவும் உங்கள் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பரிசு பெற்றவர்கள் விவரம்
கட்டுரைப்போட்டி
முதல் பரிசு கி. மகாலட்சுமி - சேலம்
இரண்டாம் பரிசு ச. பொன்முத்து - சென்னை
மூன்றாம் பரிசு ’பரிவை’ சே. குமார்
மறைமலையடிகளார் சொற்பொழிவு போட்டி
முதல் பரிசு ஸ்டெல்லா தமிழரசி ர. - சென்னை
இரண்டாம் பரிசு ஸ்ரீ வித்யா - சென்னை
தமிழ்க்குடிலின் தொடர்ந்த செயல்பாடுகளில் தங்களை இணைத்துக்கொண்டு தங்கள் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் வழங்கிட வேண்டுகிறோம்.
டிசம்பர் மாதம் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு கவிதைப்போட்டி நடைபெறவுள்ளது. அனைவரும் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். விவரம் விரைவில் தெரியப்படுத்தவிருக்கிறோம். நன்றி
என்றென்றும் அன்புடன் தமிழ்க்குடில்

Wednesday 2 December 2015

மனதை_உலுக்கிய_சென்னை_மழை..




உணவை விழுங்கமுடியாமலும், இமைகளை மூட முடியாமலும் செய்த சில நிகழ்வுகளில் இந்த சென்னை,கடலூர் மழைக்கும் பெரும் பங்கு.

3 மாத சென்னை வாசத்திற்குப்பிறகு சென்றவாரம் தான் தில்லி திரும்பினேன். தில்லி வந்தவுடன் இப்படி ஒரு மழை.. அனைவரும், நீங்கள் நலமா என கேட்கும்பொழுது நான் இங்கு நலமாகவும், சென்னையில் உள்ள என் குடும்பத்தினர் அனைவரும் நலமாகவும் உள்ளனர் என மகிழ்ச்சியடைய மனம் வரவில்லை. நான் நன்றாக இருக்கும் அதேவேளையில் எம் மக்கள் இப்படி சொந்த ஊரிலேயே அந்நியனாய் இருக்கும் நிலைகண்டு மனம் கலங்குவதை எப்படி சரி செய்துகொள்வது எனத்தெரியவில்லை.

சென்னையில் இருந்திருப்பின் எம்மால் இயன்ற வரையில் ஏதேனும் உதவிகள் களம் இறங்கிச் செய்திருக்கலாம். அதற்கும் இயலாமல் இத்தனை தொலைவில் இருந்துகொண்டு அவர்கள் படும் இன்னல்களை உடனுக்குடன் அறிந்தும் ஏதும் செய்ய முடியாத நிலை மனதை கலங்கச்செய்கிறது. அவர்களுக்குக்காக பிரார்த்திப்பதைத் தவிர ஏதும் செய்யமுடியாது இருப்பது மனதை காயப்படுத்துகிறது.

முடிந்த அளவு அலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு சிறு சிறு உதவிகள் பெற்று எங்கு சேர்க்கவேண்டுமோ அதைச்செய்தாலும் நாமும் களம் இறங்கிச்செய்ய இயலவில்லையே என்ற உணர்வும் வந்துசெல்கிறது.

இயற்கையின் இந்த விளையாட்டில் ஒரு ஆறுதல் என்னவெனில் அனைவரிடத்திலும் இயற்கையாகவே இருக்கும் மனிதம் இந்த நிலையில் புத்துயிர் பெற்றிருப்பதைக்காண முடிகிறது. பிறப்பிலேயே மனிதம் நிறைந்தவர்கள்தாம் நாம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் எண்ணற்ற எம் சகோதர சகோதரிகள் முழுமூச்சாய் உதவிகள்புரிந்து வருவது மெய்சிலிர்க்க வைக்கிறது.

மனிதத்திற்கு சாதி,மதம், கட்சி எதுவும் தடையில்லை என நிரூபித்திருக்கின்றனர். இன்று புத்துயிர் பெற்ற எம் சகோதரர்களின் மனிதம் என்றென்றும் உயிர்ப்புடன் இருக்க வேண்டுகிறேன். மனிதத்திற்கு குறுக்கே எவற்றையும்,எவரையும் அண்டவிடாதீர்கள் உறவுகளே.

கரங்கள் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து உறவுகளுக்கும், நட்புகளுக்கும் மனமார்ந்த நன்றியும், வாழ்த்துகளும்.

Monday 7 September 2015

தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் போட்டிகள் - 2015


அன்புத்தோழமைகளுக்கு,
தமிழ்க்குடில் நிர்வாகியின் அன்பு வணக்கம்.
ஜூலை மாதம் உயர்திரு காமராசர் அவர்களின் பிறந்த தினம் மற்றும் தமிழ்க்கடல்திரு மறைமலை அடிகளாரின் 139வது பிறந்ததினத்தை (15 ஜூலை) முன்னிட்டும் தமிழ்க்குடில் அறக்கட்டளை சொற்பொழிவு மற்றும் கட்டுரை போட்டி அறிவித்திருந்தது. அதிகப்படியான போட்டியாளர்கள் பங்குகொள்ளும்பொழுதுதான் போட்டி சுவாரசியமடையும் என்பதாலும் பலரின் வேண்டுகோளை கருத்தில் கொண்டும் போட்டியின் கால அளவை இந்த மாதம் இறுதி வரை நீட்டித்திருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். தோழமைகளும் ப்ங்கு கொண்டு தங்கள் நட்பு வட்டத்திலும் பகிர வேண்டுகிறோம்.

தமிழ்க்கடல் திரு மறைமலை அடிகளாரின் 139வது பிறந்ததினத்தை (15 ஜூலை) முன்னிட்டு அவரின் தமிழ்த்தொண்டை நினைவுகூரும் வகையில் தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் சொற்பொழிவு போட்டி.
போட்டி விவரங்கள்.
போட்டி எண் – 1
போட்டி - சொற்பொழிவு.
தலைப்பு - ”மறைமலை அடிகளாரும் அவரின் தமிழ்த்தொண்டும்”
விதிமுறை - மேலேகுறிப்பிட்ட தலைப்பில் சொற்பொழிவுக்கான கருத்து தயார் செய்து அவரவர் குரலில் சொற்பொழிவாக 10 நிமிட கால அளவு இருக்கும்படி பதிவு செய்து (MP3 Format) ஒலிவடிவில் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம். ஒலிப்பதிவு செய்யும்பொழுது தங்களைப்பற்றிய எந்த விவரமும் கொடுக்காமல் சொற்பொழிவு மட்டும் பதிவு செய்து வழங்கவேண்டுகிறோம். தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரி மற்றும் புகைப்படம் இவற்றை ஒலிப்பதிவு அனுப்பும் மின்னஞ்சலில் இணைத்து அனுப்பிட வேண்டுகிறோம்.
போட்டி இறுதி நாள் : 30.09.2015
மின்னஞ்சல் முகவரி : tamilkkudil@gmail.com
பரிசு விவரம் : முதல் பரிசு தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சிறப்புப்பரிசு மற்றும் சான்றிதழ், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசு நூல் மற்றும் சான்றிதழ்.
...........................
போட்டி எண் – 2

திரு காமராசர் அவர்களின் 112 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் இரண்டாம் ஆண்டு கட்டுரைப் போட்டி
போட்டி : கட்டுரைப்போட்டி
தலைப்பு :
1. தனிமனிதனாகக் காமராசர்
2. தேசியத்தலைவராகக் காமராசர்
3. நிர்வாகியாகக் காமராசர்
4. அரசியல்வாதியாக காமராசர்
விதிமுறை:
1. போட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும் இருக்கலாம்
2. குறைந்தது 4 பக்கம் முதல் 10 பக்கம் வரை இருக்கவேண்டும்.
3. படைப்புகள் வேறு எங்கும் பகிர்ந்ததாகவோ, அச்சிடப்பட்டதாகவோ இல்லாமல் தமிழ்க்குடிலின் போட்டிக்காக பிரத்யேகமா எழுதி அனுப்பவேண்டும்.
4. கட்டுரைகள் காப்பி பேஸ்ட்டாக இல்லாமல் தங்கள் வாழ்வில், உங்கள் பார்வையில் நீங்கள் திரு.காமராசரை உணர்ந்த விதத்தில் கட்டுரைகள் படைக்க வேண்டுகிறோம்.
இறுதி நாள் : 02.10.2015
படைப்பாளிகள் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரியுடன் படைப்புகளை tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படவேண்டும்.
படைப்புகளை லதா, பாமினி ஒருங்குறியில் தட்டச்சு செய்து வேர்டு ஆவணமாக அனுப்பவேண்டுகிறோம். தங்கள் படைப்புகள் எழுதியிருக்கும் பக்கத்தில் தங்கள் பெயர், முகவரி குறிப்பிடாமல் மின்னஞ்சலில் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.

முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்.
பரிசு விவரம்:
முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு, வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இலட்சை(லோகோ) பொறிக்கப்பட்ட பதக்கம் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி போட்டிக்காக வரும் கட்டுரைகளில் சிறந்தபடைப்புகள் தேர்வு செய்யப்பட்டு நூலாகவும் அச்சிடப்படும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இதை போட்டி என்று மட்டுமே எண்ணாமல், நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும்,
கொள்ள வேண்டுகிறோம்.
நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்வோமாக. அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொள்வதோடு அல்லாமல் மற்றவர்களையும் எழுத ஊக்குவித்து இந்தப்போட்டியினை சிறப்பித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன் தமிழ்க்குடில் நிர்வாகம். :)

Monday 10 August 2015

மறைமலை அடிகளார் பிறந்ததின போட்டி


அன்புத் தோழமைகளுக்கு வணக்கம்.

உயர்திரு மறைமலை அடிகளாரின் பிறந்ததினத்தை(15 ஜூலை) முன்னிட்டு ., அவரின் தமிழ்த்தொண்டை நினைவுகூரும் வகையில் தமிழ்க்குடில் அறக்கட்டளை மாறுபட்ட போட்டி நடத்தவிருப்பதாக அறிவித்திருந்தது தாங்கள் அறிந்ததே.

போட்டி விவரங்கள்.

போட்டி - சொற்பொழிவு.

தலைப்பு  - ”மறைமலை அடிகளாரும் அவரின் தமிழ்த்தொண்டும்”

விதிமுறை - மேலேகுறிப்பிட்ட தலைப்பில் சொற்பொழிவுக்கான கருத்து தயார் செய்து அவரவர் குரலில் சொற்பொழிவாக பதிவு செய்து(MP3 Format ) ஒலிவடிவில் தமிழ்க்குடில் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறோம்.  ஒலிப்பதிவு செய்யும்பொழுது தங்களைப்பற்றிய எந்த விவரமும் கொடுக்காமல் சொற்பொழிவு மட்டும் பதிவு செய்து வழங்கவேண்டுகிறோம்.  தங்கள் பெயர்,தொடர்பு எண், முகவரி புகைப்படம் இவற்றை மின்னஞ்சலில் மட்டும் அனுப்பிட வேண்டுகிறோம். 

அனுப்பவேண்டிய மின்னஞ்சல் - tamilkkudil@gmail.com

அனுப்பவேண்டிய இறுதிநாள் - 20.08.15

பரிசு : முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு நூலும், சான்றிதழும் வழங்கப்படும்.

ஒவ்வொரு போட்டியும் நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கருதி பங்குகொள்ள வேண்டுகிறோம்.

நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்வோமாக. அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொள்வதோடு அல்லாமல் ஆர்வமுடைய மற்றவர்களிடத்தும் பகிர்ந்துகொண்டு தமிழ்க்குடிலின் தொடர்ந்த அனைத்துப் போட்டியினையும் சிறப்பித்துத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

என்றென்றும் உங்களுடன்,
-தமிழ்க்குடில்.

தமிழ்க்குடில் நடத்தும் காமராசரின் 112வது பிறந்தநாள் கட்டுரைப்போட்டி

அன்புத் தோழமைகளுக்கு தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கங்கள்.

திரு காமராசர் அவர்களின் 112வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் இரண்டாம் ஆண்டு கட்டுரைப்போட்டியினை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

போட்டி: கட்டுரைப்போட்டி
தலைப்பு :
1. தனிமனிதனாகக் காமராசர்
2. தேசியத்தலைவராகக் காமராசர்
3. நிர்வாகியாகக் காமராசர்
4. அரசியல்வாதியாகக் காமராசர்
விதிமுறை:
போட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும் இருக்கலாம்
குறைந்தது 3 பக்கம் முதல் 10 பக்கம் வரை இருக்கவேண்டும்.
படைப்புகள் வேறு எங்கும் பகிர்ந்ததாகவோ, அச்சிடப்பட்டதாகவோ இல்லாமல் தமிழ்க்குடிலின் போட்டிக்காக பிரத்யேகமா எழுதி அனுப்பவேண்டும்.
கட்டுரைகள் காப்பி பேஸ்ட்டாக இல்லாமல் தங்கள் வாழ்வில், உங்கள் பார்வையில் நீங்கள் திரு.காமராசரை உணர்ந்த விதத்தில் கட்டுரைகள் படைக்க வேண்டுகிறோம்.
படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 20.08.15
படைப்பாளிகள் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரியுடன் படைப்புகளை tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பிவைக்கப்படவேண்டும். குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது.
படைப்புகளை லதா, பாமினி ஒருங்குறியில் தட்டச்சு செய்து வேர்டு ஆவணமாக அனுப்பவேண்டுகிறோம். தங்கள் படைப்புகள் எழுதியிருக்கும் பக்கத்தில் தங்கள் பெயர், முகவரி குறிப்பிடாமல் மின்னஞ்சலில் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.
முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்.
பரிசு விவரம்:
முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு, வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இலச்சினை(சின்னம்-Logo) பொறிக்கப்பட்ட பதக்கம் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி போட்டிக்காக வரும் கட்டுரைகளில் சிறந்தபடைப்புகள் தேர்வு செய்யப்பட்டு நூலாகவும் அச்சிடப்படும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இதை போட்டி என்று மட்டுமே எண்ணாமல், நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கொள்ள வேண்டுகிறோம்.
நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்வோமாக. அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொள்வதோடு அல்லாமல் மற்றவர்களையும் எழுத ஊக்குவித்து இந்தப்போட்டியினை சிறப்பித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் உங்களுடன்,
-தமிழ்க்குடில்.

அறிந்தும்_அறியாமலும்..

மனப்பாறையை அழகு சிற்பமாக செதுக்க உளியாகப் பயன்படும் பகிரப்படாத உணர்வுகள்.. ‪#‎சிலபல_நேரங்களில்‬சிதறடிக்கச் செய்யும் வெடியாகவும் பயன்படலாம்.
****
மரணத்திற்கு மரணமில்லையெனும் உண்மையுணர்ந்து., மரணச்செய்தியை சலனமின்றி ஏற்கத் தெரிந்தவர்களுக்கு‪#‎சிலபல_நேரங்களில்‬ கல்நெஞ்சமென மகுடம் சூட்டப்படலாம்.  

***
ஒருவரின் சொல்லிலும்., செயலிலும் என்ன தவறு இருக்கும் அதை சுட்டிக்காட்டலாம் என்ற எண்ணத்தில் அணுகும்பொழுது அவற்றிலிருக்கும் கருத்துகள் கவனிக்கப்படாமல் நம்மையறியாமலேயே புறக்கணித்து ஒதுக்கப்ப(டலாம்)டுகின்றன. 
***
ஏதோ ஒன்றை யாரோ ஒருவர்மூலம் உணர்த்த இயற்கை முற்படுகையில், அதை உணர மறுக்கும் (நம்)அறியாமையே விதியாகிப்போகிறதோ..?!
****
அந்த நேரம் சுவாரசியம் கொடுக்கக்கூடிய எதுவாயினும் படித்து., வேடிக்கைப் பார்த்து அடுத்த சுவாரசியம் கிடைக்கும்வரை அதை மென்று தீர்வு பற்றி கவலைப்படாமல் கடந்து செல்வதே இயல்பாகிவிடுகிற(தோ)து..
smile emoticon

Wednesday 5 August 2015

நிகழோவியம்...


நிகழ்வுச் சித்திரத்தை
ஜாதி, மத அரசியல் கண்ணாடியணிந்து.,
விருப்பு வெறுப்பு தூரிகையேந்தி
மனதிற்கேற்ற வண்ணமடித்துக் காட்சிக்கு வைக்க..
சந்தைக்கு வரும் சித்திரமோ
தன்னழகை மறை(ந்)த்து
ரசிகனையடைய..
உண்மைத்தன்மையறியாத
ரசிகர்கள்..
ஓவியனின் எண்ண ஒளியில்
ரசித்து மகிழ்ந்து கொண்டாடியும்...
வெறுத்து உமிழ்ந்து ஒதுக்கவும் செய்ய..!
தன் எண்ணத்திற்கேற்ற வண்ணம் சேர்க்காது.. 

ஓவியத்தின் தன்மை மாற்றாது
காட்சிப்படுத்தும் நடுநிலை ஓவியனுக்காய் 

நிகழோவியத்தின்
தவம் தொடர்கிறது...

முரண்...

விதைக்கப்படும் அன்பு
அன்பாக சிலநேரமும்,
கோபமும், வெறுப்புமாக சிலநேரமும் 
அறுவடைசெய்யப்பட..
விதைக்கப்பட்ட வெறுப்பும், கோபமும்
அன்பாக சிலநேரமும்,
வெறுப்பும், கோபமுமாகவே சிலநேரமும்
அறுவடைசெய்யப்பட...
அறுவடை..
விதைக்கப்படும்
விதையைப் பொறுத்தில்லாமல்
விதைக்கப்படும்
நிலத்தின் தன்மைக்கேற்பவே அமை(யும்)கிறது...

Monday 6 July 2015

தமிழ்க்குடில் அறக்கட்டளை 2015 அன்னையர் தின கட்டுரைப்போட்டி முடிவுகள்

அன்பு சொந்தங்களுக்கு அன்பான வணக்கம்,
2015 ஆம் ஆண்டு அன்னையர் தினத்தை முன்னிட்டு “தமிழ்க்குடில் அறக்கட்டளை” நடத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிய ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் தங்களுக்கு இதோ முடிவுகள் விவரம்..
முடிவுகள் அறியும் முன்பு, தங்களுடைய வாழ்க்கைப்பணி, தமிழ்ப்பணி மற்றும் சமூகப்பணி என பல பணிகளுக்கு நடுவில், தங்களுடைய சிரமம் கருதாமல் நம் தமிழ்க்குடிலுக்காக குறுகிய கால அவகாசத்தில் சிறந்த கட்டுரைகளைத் தேர்வு செய்து கொடுத்த நடுவர்கள் பற்றிய சிறு அறிமுகம். நடுவர்களுக்கு தமிழ்க்குடில் குடும்ப உறுப்பினர்கள் சார்பாகவும், தமிழ்க்குடில் நிர்வாகம் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
கட்டுரைப் போட்டியின் நடுவர்கள்
1. உயர்திரு. முனைவர் க. இராமசாமி. செம்மொழி நிறுவனத்தின் பொறுப்பு அலுவலராக விளங்கும் முனைவர் க.இராமசாமி அவர்கள் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் பிறந்தவர். மொழியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மொழியியல் துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர். ஆங்கிலம்,இந்தி, வங்களாம், கன்னடம் உள்ளிட்ட பலமொழிகளை அறிந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் பணியில் இருந்தவர். 1983 முதல் 2003 வரை மைசூர்இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில்(CIIL) துணை இயக்குநராகப் பணியாற்றியவர். மைசூரில் பணியாற்றிய காலத்தில் தமிழ்ச் சிற்றிதழ்களை ஊக்குவிக்கும் வகையில் பல தமிழ்ச் சிற்றிதழ்களுக்கு நிதியுதவி கிடைப்பதற்கு உதவியாக இருந்தவர். தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குப் பலவகையில் பாடுபட்டுள்ளார். இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் தொடங்கப்பெற்றதும் அதன் பொறுப்பு அலுவலராக இருந்து நிறுவன வளர்ச்சிக்கு ஆக்கப்பணிகள் பலவற்றைச் செய்து வருபவர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பணிகள் பலவற்றிற்குக் கால்கோள் இட்ட பெருமை முனைவர் க.இராமசாமி அவர்களுக்கு உண்டு.
2. எழுத்தாளர் திருமதி. ஷைலஜா – பெங்களூரில் வசித்துவரும் திருமதி ஷைலஜா, சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், ஓவியம், பாடகி, நடிப்பு, பிண்ணனிக் குரல், அறிவிப்பாளர் என அனைத்துத் துறையிலும் சிறந்துவிளங்குபவர்.
கனடாவிலிருந்து இணையம் வழி ஒலிபரப்பான பண்பலையில் அறிவிப்பாளராகக் கடமையாற்றிய இவர் இதுவரை 270 சிறுகதைகள்,12 நாவல்கள்,2 குறுநாவல்கள்,5 தொடர் கட்டுரைகள்,12 வானொலிநாடகங்கள்,3 தொலைக்காட்சி நாடகங்கள் எழுதி இருக்கிறார். இன்னும் தொடர்ந்து சர்வதேச இதழ்களிலும், இணைய இதழ்களிலும் எழுதிவருவதோடு, விளம்பரப்படங்களுக்கும் குறும்படங்களுக்கும் பின்னணிக் குரல் தருகிறார். எழுத்திற்காக பல விருதுகளையும் பரிசுகளையும் வென்றிருக்கும் இவரது சிறுகதைகள் சிலகன்னட மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.
கட்டுரைப்போட்டி:
முதல் பரிசு : முனைவர் ஜ. பிரேமலதா , சேலம் -(அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை. )
இரண்டாம் பரிசு : திருமதி வசந்தா ராமன், காசியாபாத், (தில்லி) - (அன்பின் அவதாரம் தாய்)
மூன்றாம் பரிசு : நர்கீஸ் பானு, ஐக்கிய அரபு அமீரகம்
- (அன்னை ஒரு வரம்)
பரிசு பெற்ற மற்றும் போட்டியில் பங்குகொண்ட அனைவருக்கும் நடுவர்கள் சார்பாகவும், தமிழ்க்குடில் குடும்ப உறுப்பினர்கள் சார்பாகவும், தமிழ்க்குடில் அறக்கட்டளை நிர்வாகத்தின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்க்குடிலின் தமிழ்த்தோட்டத்தில் மலர்ந்து மணம்வீசும் மலர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும், வாழ்த்துகளும். இனிவரும் போட்டிகளிலும் தொடர்ந்து பங்குகொண்டு சிறப்பித்து தமிழ்க்குடிலின் செயல்பாடுகளில் தொடர்ந்திருக்க வேண்டி வாழ்த்தி விடைபெறுகிறோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பற்றிய நடுவரின் சிறு குறிப்பு பரிசுபெற்றக் கட்டுரைகளைப் பதியும்போது அந்தந்த கட்டுரையுடன் பகிரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
குறிப்பு: பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் நடத்தவிருக்கும் கட்டுரைப்போட்டி பற்றிய அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியிடவிருப்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
என்றென்றும் அன்புடன்,
தமிழ்க்குடில் அறக்கட்டளை.

Sunday 17 May 2015

மௌனத்தை நோக்கி....!!


காதல் கசிந்துருகி, மனதைக் கனியவைத்து
என் உள்ளம் களிப்படையச்செய்த
தமிழ்க் கவிதைகளைக் காணவில்லை…!
என் கோவம் கொன்று, மனதை வென்று
முகத்தோட்டத்தில்
மகிழ்ப்பூவை மலரச்செய்த
அவன்
அன்பு வார்த்தைகளைக் காணவில்லை…!!
ஐயிரண்டு விரல்களால்
அவனை ஆரத்தழுவி ஆறுதல் கூற…
சொல்லொனா சோகத்தை
வெளிப்படுத்திய
துயர வார்த்தைகளைக் காணவில்லை..!
மனம் வலுவிழக்கும் நேரத்தில்
பலமாய் நானிருக்கிறேன் - எனும்
நம்பிக்கை வார்த்தைகளைக் காணவில்லை..!!
சாதிக்கவேண்டுமென
சபதமேற்க வைக்கும்
அவன்
எழுச்சிவார்த்தைகளைக் காணவில்லை…!!
என் எண்ணங்களுக்கு வண்ணம்சேர்த்து
எழுத்தோவியமாய்ப் படைக்க
சிந்தனைகளைத் தூண்டிவிடும்
உற்சாகவார்த்தைகளைக் காணவில்லை..!
உற்றதோழனாய் நானிருக்கிறேன் - என்ற
நட்புவார்த்தைகளைக் காணவில்லை…!
ஊடலுக்கும், கூடலுக்கும் பாலமாய்..
மனதினில் எண்ணி எண்ணி
மந்தகாசப் புன்னகையை தோற்றுவித்து
உரையாடலைத் தொடரும்
காமம் கலந்த காதல் வார்த்தைகளைக் காணவில்லை…!!
அன்பு, காதல், நட்பு, பாசம்
காமம், குரோதம், பகை..
வெறுப்பு, மௌனம் என
எண்ணற்ற உணர்வுகளை
வார்த்தையில் வடித்தெடுத்த
காலமும் சென்றதோ…?!
உணர்வுருக்கள் உதவியுடன்
உணர்வுகளை வெளிப்படுத்தியே
பறந்துதிரிந்த சிந்தனைச் சிறகுகளை
வெட்டி வீழ்த்தி..
வார்த்தைகளை வற்றச்செய்ததோ…
வரமாய் வந்த உணர்வுருக்களுமே..??!
வார்த்தைகளைத் துறந்து வடிவங்களைப்பகிர்ந்து
நிரந்தர மௌனத்தை நோக்கிய பயணமோவிது..??
உணர்வுருக்களின் வருகை வரமா..?! சாபமா..?!

Friday 15 May 2015

அன்னையர் தின கட்டுரைப்போட்டி - தமிழ்க்குடில் அறக்கட்டளை


அன்புத் தோழமைகளுக்கு தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கங்கள். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்க்குடில் கவிதை, கட்டுரைப் போட்டிகளை நடத்திவருவது தாங்கள் அறிந்ததே.

2015 ஆம் ஆண்டிற்கான போட்டிகளில் முதல் கட்டமாக ”அன்னையர் தினத்தை” முன்னிட்டு பெண்களுக்கான கட்டுரை போட்டிகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

போட்டி: அன்னையர் தினம் - பெண்களுக்கு மட்டும். smile emoticon


தலைப்பு : அன்னையை முன்னிறுத்தி உங்களுக்கு விருப்பமான தலைப்பில் எழுதவும். தங்கள் சிந்தனைகள் குறிப்பிட்ட ஒரு தலைப்பில் சுறுங்(க்)கி விடாமலிருக்க தலைப்பினை தேர்வு செய்வதை தங்களிடமே வழங்கியிருக்கிறோம். smile emoticon


விதிமுறை: குறைந்தது 3 பக்கம் முதல் 10 பக்கம் வரை இருக்கவேண்டும்.

படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 10.06.15 .

படைப்பாளிகள் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரியுடன் படைப்புகளை tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பிவைக்கப்படவேண்டும். குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது.

படைப்புகள் வேர்டு ஆவணமாக அனுப்பவேண்டுகிறோம். லதா, பாமினி ஒருங்குறியில் தட்டச்சு செய்து அனுப்பவேண்டுகிறோம். கவிதை எழுதியிருக்கும் பக்கத்தில் தங்கள் பெயர், முகவரி குறிப்பிடாமல் மின்னஞ்சலில் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.  



போட்டி சம்பந்தமாக எழும் சந்தேகங்களை பதிவில் மட்டும் கேட்கும்படி வேண்டுகிறோம்.

முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்.

முதல் பரிசு: ரூ.1500/- மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்

இரண்டாவது பரிசு: தமிழ்க்குடில் வழங்கும் சிறப்புப்பரிசு மற்றும் சான்றிதழ்

மூன்றாவது பரிசு: நூல் மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்.

இதை போட்டி என்று மட்டுமே எண்ணாமல், நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கொள்ள வேண்டுகிறோம்.

நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்வோமாக.
அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் உங்களுடன்,
-தமிழ்க்குடில்.

குறிப்பு. : இந்தப்பதிவை காணும் நண்பர்கள் தங்கள் நட்புகளிடத்தும் பகிர்ந்து அதிக எண்ணிக்கையிலான எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தவேண்டுகிறோம். போட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும் இருக்கலாம் எனவே தங்கள் நட்பு, சுற்றம் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்.

Thursday 14 May 2015

தேவை ஒரு முகமூடி..!!

நேசத்திற்குரியவரை
அன்புமலர்களால் அர்ச்சிக்க...
நிராகரிக்கப்பட்டு 
குப்பையில் வீசப்பட்ட மலர்கள்
வழியும் விழிநீரில்
வதங்காது பாதுகாக்க.,
அம்பென வீசப்பட்ட
அலட்சிய வார்த்தைகள்
இதயத்தைக் கிழித்துக் கொணரும்
இரத்தவாடை 

மலரின் மணத்தை மாற்றாதிருக்க...
பாசமென பாசாங்கு செய்வோரின்
வேடத்தை அறிந்தும்
அறியாமலிருக்க..

இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகம்
மறந்திட...

நறுமணமிக்க புன்னகை மலரை
நிரந்திரமாய் அணிந்து
வலிமறைத்து வலம் வந்திட
தேவை ஒரு முகமூடி..! smile emoticon 

Saturday 25 April 2015

‪இதய_அரங்கு‬...!!



மனதாளும் மன்னவன் 
இதழ் திறவாது..
உணர்வுகளை உணர்ந்து
அவனை உள்வாங்கி
உணர்வுகளால் ஒன்றியதையெண்ணி
மனமொத்த மனமது வரமென
இறுமாந்திருக்கும் வேளையில்..

அனுபவ முட்கள்
கிழித்த வலியில்
இரத்தம் கசிய
மனம் வாடியிருக்கும் கொற்றவனை
காதலில் கசிந்துறுகும் காரிகை...

வாஞ்சையாய் வாரியணைத்து
வார்த்தைகளால் ஆறுதல் சமைத்து
அவனுக்கு
அமைதியைப் பரிமாறிட
எண்ணியிருக்க..

மனமொத்த மனமது
உரைக்காத போதும்..
அவன்
உணர்வுகளால் உந்தப்பட்டு
வலிகளை உள்வாங்கி
கொந்தளிக்கும் மனம்...
வார்த்தைகளை வற்றச் செய்திட..

வசமிழந்த வார்த்தைகளை சபித்து
மௌனத்தை
மொழிபெயர்க்கத் தெரிந்தவனுக்கு
மௌனமாய்
மௌனத்தால்
மருந்திடுகிறேன்
மனதினால்..!

மனமொத்த 
உணர்வுகளையடைந்தது
வரமா...? சாபமா..?
பட்டிமன்றம் நடத்தப்படுகிறது
என் இதய அரங்கில்...!

Sunday 19 April 2015

ஆன்மாவின்_அமைதி‬..!!


காலனை 
கரம் பிடிக்கும் தருவாயிலும் 
உன்மடிமீது உயிர்துறக்க விரும்பியவளின் மரணத்தை..
எங்கோ நடக்கும் 
எனக்கான இரங்கல் கூட்டத்தில் அறிகிறாய்..!
என்னவனே
நீயறியாது என்னுயிர் பிரியாதென்றாயே..!
நாம் ஆடிய
கண்ணாமூச்சியாட்டத்தில்...
காலனடைந்த வெற்றியை
நீ சிந்தும் கண்ணீர்த் துளிதான்
மாற்றிடுமா...?!
எப்படியிருந்தாலென்ன. .
எனக்காக நீ சிந்தும்
ஒற்றைத்துளி கண்ணீரும்
என் ஆன்மாவைக் குளிர்விக்கும்
அடைமழையென மகிழ்ந்து
அமைதி கொள்கிறேன்...!! smile emoticon

Friday 17 April 2015

மரணத்தை வேண்டி....!!



பூசை  முடித்து வெளியே வந்த வனிதாவிடம்,. அம்மா உங்களுக்கு போன் என்றபடி வேலைக்காரப்பெண் கனகம் ரிசீவரை கொடுக்க, “ ஹலோ, ஆமா வனிதாதான் பேசறேன்.. ஓ அப்படியா...?? எப்போ...!!  ம்ம் என்றவாறே போனை வைத்தவள்,அப்பா கடவுள் கண்ணைத் திறந்திட்டார்..... என நிம்மதிப்பெருமூச்சு விட்டாள்.

என்னம்மா யாரு போன்ல..? ஒரு நிமிசம் அதிர்ச்சியானீங்க, பிறகு கடவுளுக்கு நன்றின்னு சொன்னீங்க என்னமா விசயம்.?  நடப்பதை அறிந்துகொள்ளும் ஆவலில் கனகா கேட்க, என் ஃப்ரண்ட் சுஜா காலையில் இறந்துட்டாளாம் அவளோட கணவர்தான் போன் செய்தார்.”  அதிர்ந்தாள் கனகா..!!! ஃப்ரண்டு சொல்றீங்க இப்படி நிம்மதிப்பெருமூச்சு விடறீங்களே வனிதாவை சற்றே வித்தியாசமாக உற்றுநோக்க... அவளின் பார்வையைப்புரிந்த வனிதா.. ஏய் என்ன அப்படி பார்க்கற.. தோழியோட சாவுக்கு சந்தோசப்படறேன்னா..??

ம்ம்..

அதுக்குக்காரணம் இருக்கு கனகா என்றவள் தன் தோழி சுஜா பற்றி கூறத்தொடங்கினாள். 

சுஜா ஒரு கிராமத்தில் பிறந்திருந்தாலும் வளர்ந்தது எல்லாம் பெங்களூரில்.  அம்மா,அப்பாவிற்கு ஒரே பெண்.  நல்ல வசதியான குடும்பம்.  தாய் உமா வெளி உலகம் அறியாதவள்.    சுஜாவிற்கு  பிறப்பிலேயெ முதுகு சற்றே புடைத்திருப்பதை உமா கவனிக்கவே இல்லை. எடுத்துக்கூற பெரியவரும் இல்லை. சுஜா அனைவரையும்போல் பள்ளிப்படிப்பு  முடித்து, கல்லூரிக்கு செல்லும்பொழுது  கூண் அதிகம் தெரியவே மருத்துவரிடம் கேட்க சிறு வயதிலேயே சரி செய்திருக்க வேண்டும் இப்ப ஒன்னும் செய்யவியலாது என்று கைவிரித்து விட்டனர்.  அப்பப்ப எல்லாரும் நிமிந்து நட சுஜா என்பார்கள் ஒரு சிரிப்பு சிரித்து விட்டு சென்றுவிடுவாள்.  வயது வந்த காரணத்தினால் வெட்கத்தில் கூண் போடுவதாக அனைவரும் நினைத்து  அதைக்கண்டு கொள்ளவில்லை.  சுஜா இருக்கான்னு அந்தத் தெருவுக்கு வரும்போதே தெரியும் எப்பவும் ஒரே சிரிப்பு சத்தம் கேட்கும் அப்படி ஒரு கலகலப்பு.  தன்னைச்சுற்றி அனைவரும் எப்பவும் மகிழ்ச்சியா இருக்கனும் என்பதில் கவனமா இருப்பா. தன் கவலை, உடல்நிலை ஒருபோதும் பகிரமாட்டாள்.

சில காலங்களில் பணிக்கு சென்று விட்டாள்.  அனைவரிடமும் அன்பாகப் பழகும் அவளுக்கு.  பெற்றோர்கள் நிச்சயித்தபடி திருமணமும் நிகழ்ந்து ஊரை விட்டே சென்றுவிட்டாள்.  அப்பப்போ போனில் பேசுவோம்.  குழந்தை பிறந்த பொழுதுகூட சென்றுபார்க்க முடியவில்லை.  கணவன் அரவிந்த நல்ல அனுசரனையானவன். அதிகம் பேசாவிட்டாலும் கூடமாட ஒத்தாசை செய்வது என உதவியாக இருப்பான். அடிக்கடி கணவர் பற்றி என்னிடம் பெருமைபட்டுக்கொள்வாள். மாமியார் மாமனார் உடன் இல்லை எனினும் அவ்வப்போது அந்த பதவிக்கே உரித்தான முறையில் அலைபேசியிலேயே அனைத்து வில்லங்கமும் வந்துசெல்லும். 2 வருடத்தில் ஒரு மகனும் பிறக்க மகிழ்ச்சியாகவே இருந்தாள் சுஜாதா. குழந்தைக்கு 10 வயது இருக்கும்போது திடீரென நெஞ்சுவலிக்க துடித்துப்போனாள்.  மருத்துவரிடம் காண்பித்து அனைத்து பரிசோதனையும் செய்ய, ஒன்றுமே இல்லை ஆன்சைட்டிதான் காரணம் கவலையில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என மருத்துவர்கள் கூறி அப்போதைக்கு மருந்துகள் பரிந்துரைத்தனர்.
இப்படி அடிக்கடி நெஞ்சுவலி வருவதைக்கண்ட அவள்   கணவன் அர்விந்த் அப்படி என்னதான் வியாதியோ கவலைபட காரணம்  எதுவுமில்லை…டாக்டரும்ஒன்றுமில்லையென சொல்லிட்டார்… .ஆனால் இந்த நெஞ்சுவலி உனக்கு எதனாலதான் வருதோவென ஒருநிலநேரம் சலித்துக்கொள்வான். அதன்பிறகு நெஞ்சுவலிச்சாகூட யாரிடமும் சொல்லாமல் தனக்குத்தானே வலியை அனுபவிக்கத் தொடங்கினாள்.  10 முறை வலிச்சா ஒருமுறை மட்டும் சொல்லுவா.  ஒருநாள் வேற ஒரு பிரச்சினைக்காக முழு செக் அப் செய்ய,எக்ஸ்ரேவில் முதுகுத்தண்டு பெண்ட் ஆகி ஒரு பக்க லங்க்ஸ் கம்ப்ரஸ் ஆகி இருப்பதாகவும், தற்போதைக்கு பிரச்சினை இல்லை ஆனா வயதாக வயதாக மூச்சு விடுவதே சிரமமாக இருக்கும் என்றும்  மருத்துவர்கள் கூறிவிட்டதை சுஜா என்கிட்ட போன்ல சொல்லி வருத்தப்பட்டாள். நானும் ஆறுதல் சொன்னேன்.

அதைப்பெரிதும் பொருட்படுத்தாதவர்கள் அந்த நேர மருத்துவ உதவி பெற்று சரியானதும் மறந்தேபோயினர்.  மகிழ்ச்சியாய் காலங்கள்  உருண்டோட ஒருநாள் வழக்கமான நெஞ்சுவலி அதிகரிக்க மூச்சுவிடவே சிரமப்பட்டவளை மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்ய,  டாக்டர்கள் இனி இப்படித்தான் இருக்கும் எனக்கூறிஏதேதோ மருந்துகள் பரிந்துரைத்து அனுப்பிவிட்டார்.

இரண்டுமாதத்திற்கு முன் ஒருநாள் திடீரென  சுஜா போனில் அழைத்து, ”வனீ  நா உன்ன பார்க்கனும் உடனே வா என்றாள்.” நானும்  அவளை சென்று சந்தித்தேன். படுக்கையில் இருந்த சுஜா, என் கையைப்பற்றிக்கொண்டவள், ”வனிதா எனக்கு இப்ப எல்லாம் ரொம்ப முடியல இதுவரை உன்னத்தவிர யார்கிட்டயும் மனம் பகிர்ந்தது இல்ல.  என் வாழ்க்கை இனி இப்படித்தானு டாக்டர் சொல்லிட்டாரு.  ஆனா எனக்கு இதில விருப்பம் இல்ல.  கணவரும், குழந்தையும் என்னைப் பரிதாபமா பார்க்கறமாதிரி ஒரு ஃபீல்.   நான் தான் வலில கஷ்டப்படறேன்னா என்னப்பார்த்து அவங்க வருத்தப்படறது இன்னும் அதிகமா வலிக்குது. இப்படி அடிக்கடி மூச்சு விட சிரமப்பட்டு நானும் வலி அனுபவித்து மற்றவர்களுக்கும் ஒரு சலிப்பு ஏற்படுத்தி என்மேல் ஒரு வெறுப்பும், பச்சாதாபமும் வருவதற்குள் நல்லமுறையில் என் மரணம் நிகழனும்.  ”படுத்தபடுக்கையா அதுவும் ஒரு பெண் எல்லா நேரத்திலும் பிறரின் உதவியை எதிர்நோக்கியிருப்பது எவ்வளவு கொடிதுன்னு உனக்கு நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை.” வனிதா, ”எப்பவும்போல வீடே அதிர சிரித்து மகிழ்ந்து என் சாவு இருக்கனுமே தவிர நோயாளியா படுக்கையிலேயே இருக்கக்கூடாது” என்றவளின் கரம்பிடித்து, ”உன் மனசுபோல அமையும் கவலைப்படாத” என்று ஆறுதல்படுத்த.. ”இல்ல நீ சும்மா என்ன சமாதானம் செய்யாத எனக்கு ஒரு வாக்கு கொடு என்றவளிடம், என்ன என்பதுபோல் நெற்றி சுருக்க...”ஒவ்வொரு நாளும் நீ எனக்காக என் மரணத்தைவேண்டி பிரார்த்திக்கனும்.” சுயநலமற்ற வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.  என்மீதான உன் அன்பு எனக்குத்தெரியும். நான் வலியில் துடிப்பதை உன்னால் தாங்க முடியாது.உன்னாலதான் இது முடியும்” என்றவளிடம் மனதை திடப்படுத்திக்கொண்டு சத்தியம் செய்துட்டு வந்தேன்.

அவள் மீதான அன்பும், அவள் வேண்டலில் இருந்த உண்மையும் புரிய தோழியிடம் செய்த சத்தியத்தைக் காப்பாற்ற அவளின் வலியற்ற மரணத்திற்கு  நித்தமும் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு செய்தி.  தோழியின் கதையைக்கூறி முடித்தாள் வனிதா.

இறப்பு நிச்சயம்.  அதை மாற்றவோமறுக்கவோ இயலாது.  ஆனா, என் தோழி அதிகம் துன்பப்படாமல் இறக்கவேண்டும் என எண்ணியதில் என்ன தவறு..?மகிழ்ச்சிதானே கனகா..?  அதான் கடவுள் கண்ணைத் திறந்துவிட்டார்னு சொன்னேன் என்ற வனிதாவை வியப்பாய் பார்த்தாள் கனகா.

சரி சரி நேரமாச்சு நான் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கனும்.  சார் வந்தா நீ விசயத்த சொல்லிடு. அவர் போன் ஆஃப்ல இருக்கு. முக்கியமான வேலையில இருப்பார். வந்தவுடன் சொல்லு என்றுகூறிச்செல்லும் வனிதாவையே பார்த்துக்கொண்டிருந்தாள் கனகா.

சுஜா வீட்டில் அனைவரும் இவளுக்காக காத்திருக்க கடைசி யாத்திரைக்கு தோழிக்கு மாலை அணிவித்து அவளை  முத்தமிட்ட வனிதா, சுஜாவின் சிரிப்பு சத்தத்தை உணர்ந்தாள்...!!