முகப்பு...

Friday 21 April 2017

”எதுவும் நிரந்தரமில்லை..”

”எதுவும் நிரந்தரமில்லை..”

மரணத்திற்கு மரணமில்லையெனும்

யதார்த்தம் உணர்ந்தே...
ஆண்டாண்டு காலம் உடன் பயணித்தவர்
உலகம் துறக்கையில்...
மரணச்செய்தி கேட்டு மருண்டுவிடாது..,
கண்ணீர்விட்டுக் கதறியழுதிடாது.,
அடுத்தது என்ன என வினவியே
ஆகவேண்டியதைச் செய்திட 
அடுக்கடுக்காய் உத்தரவுகள் பிறப்பித்து..
அன்புக்குரியவரை “தீ”க்கு இரையாக்கி...
பிடி சாம்பலுக்காய் காத்து நிற்கும் வேளையில்..
உலக வாழ்வினின்று விடுதலையடைந்தவருக்காய்,
சிலநொடி கண்மூடி பிரார்த்திக்க...

வாழ்க்கைப்பாதையில் நிரந்தரமில்லா வாழ்வதனில்..
காலன்விளையாடும் பகடைக்காயில்..
மரணத்தை சந்திக்காத உயிர்களும் உண்டோ இவ்வுலகினில்...
நிதர்சனத்தை உணர்ந்து நிகழ்வினை 
சலனமின்றிக் கடப்போரை....

உற்றவரும், மற்றவரும் - இவள்(ன்)
கல்நெஞ்சக்காரி(ரனோ)யோ...
மனப்பிறழ்ச்சி கொண்டவளோ(னோ).. என
முதுகுக்குப்பின்னே முத்தாய்ப்பாய் பட்டம் சூட்டப்பட...
மயானம் என்றும் பாராமல்..
சிறுபுன்னகை எட்டிப்பார்க்க...

உறவில்லாதவரும் கண்ணீர் பெருக்கெடுக்கக் கதறியழுது..
மூக்கில் நீர் ஒழுக, மூச்சுத்திணறி....
விம்மி, வெதும்பிட..
ஏதோ ஓர் நேரத்தில் இறந்தவரை ஏசியோரும்..
அவர் வளர்ச்சியில் பொறாமைக் கொண்டோரும்..
இன்று அவர் புகழ்பாடிட..
கூட்டமெல்லாம் கூறுகிறது..
ஆகச்சிறந்த அன்பு அதுவென...!!

நிதர்சனத்திற்கும்... - எதுவும் நிரந்தரமில்லா 
நித்தமும் வாழும் வாழ்க்கைக்கும்தான்
எத்தனையெத்தனை வித்தியாசம்...?

நிதர்சனம் மறுத்து...
நிழலை விரும்பிடும் மனித மனம்..!!
மாண்டவரும் மீளப்போவதில்லை...
மாண்டவருடன் நாமும் - உடன் 
மரணித்துப் பயணிக்கப் போவதில்லை..!..

அறிந்தும்... தொடர்கிறதோ.....
நிதர்சனத்தை வெறுத்து..
நிழலை விரும்பிடும் விருப்பங்கள்..??!


...........நட்புடன் காயத்ரி வைத்தியநாதன்.. :)