முகப்பு...

Monday 7 January 2013

வாழ்த்துகளும், பரிசுகளும்...

சமீப சில ஆண்டுகளாக நம்மிடையே  பரவலாகக் காணப்படும் ஒரு பழக்கம்  தீபாவளி மற்றும் புத்தாண்டுக்கு  ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களோடு பரிசுகள் பகிர்ந்துகொள்வது.  தனிமனிதன் மட்டுமல்லாமல் நிறுவனங்களும் தமது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பரிசுப்பொருட்கள் அல்லது உலர்ந்த பழங்கள், இனிப்பு வகைகள் கொடுத்து வருகின்றன.  இவ்விதம் செய்வதனால் ஊழியர்களுக்கு ஒரு  ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  ஆனால் ஒரு நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கும், நட்பு நிறுவனங்களுக்கும் இதுபோன்று  அன்பளிப்புகள் என்ற பெயரில் கடிகாரம்,அலங்கார பொருட்கள், துணிகள், உலர்ந்த பழவகைகள் மற்றும் இனிப்பு பெட்டிகள் என்று ஏதேனும் ஒன்றை கொடுத்துவருகின்றனர்.  இது சரியா..?? ஒரு வாடிக்கையாளர் பணம் பெற்று பொருள் கொடுக்கிறார்.  அல்லது சேவை செய்கிறார் அப்படியிருக்க இதுபோன்ற அன்பளிப்புகள் அவசியமானதுதானா.?  இந்தப்பழக்கம் இவ்வளவு காலங்களாக இல்லாமல் சமீப காலங்களாக மட்டும் அதிகரித்து வருவது ஏன்.? இதுவும் நாகரீக மாற்றமா..இதுபோன்ற பரிசுப்பொருட்கள் கொடுக்கப்படாதநிலையிலும் சேவைகளும், பணிகளும் செவ்வனே நடந்துவந்து கொண்டுதானே இருந்தது..??

தன் அன்பை வெளிப்படுத்துவதற்கும், வாழ்த்துக்களைப் பகிர்வதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட இந்தப்பழக்கம் நாளடைவில் அத்தியாவசியமாகிப் போய்விட்டது.  ஒரு ஆன்மரீதியான வாழ்த்துப்பரிமாற்றங்கள் போய் வாழ்த்துப்பரிமாற்றமும், பரிசுப்பகிர்தலும் சம்பிரதாயமாகவே  பகிரப்பட்டு வருவதே அதிகமாகக் காணப்படுகிறது இன்றைய காலக்கட்டங்களில்.

ஒரு நிறுவனத்தில் உள்ள முக்கியமான ஊழியர்களுக்கு ஒரு வாடிக்கையாளர் பரிசுப்பொருள் வழங்கவேண்டுமெனில், எதிர்காலத்தில் அதற்கான தொகையையும் நம்மிடமிருந்து ஏதோவொரு முறையில்தானே வசூலிக்கப்படும் அல்லவா.  அந்த நிறுவனத்தார் என்ன கொடுத்தார், இந்த நிறுவனத்தார் என்ன கொடுத்தார் என்ற ஒப்பீடு செய்யும் மனோபாவத்தையும் ஒரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தவே செய்கிறது.  அதோடு அல்லாமல் நமக்குப் பரிசுகொடுத்தவர்களுக்கு(கே) அதற்கு நிகரான பொருட்கள் கொடுக்கவேண்டும் அல்லது சற்று அதைவிட அதிக மதிப்பில் கொடுக்கவேண்டும் என்ற சிந்தனையே மேலோங்கிவருகிறது.  அப்படி பரிசுகள் வழங்காதவர்களை அலட்சியப்படுத்தவும் தூண்டுகிறது.  வேடிக்கை என்னவெனில், இதுபோன்ற பரிசுப்பொருட்கள் வந்துதான் அவர்கள் குடும்பம் சமாளிக்க வேண்டும் என்ற நிலையில் யாரும் இல்லாத நிலையிலும், ஏதோ ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உண்மையான அன்புக்கு அங்கு முக்கியத்துவம் இல்லாமல் போகும் நிலைக்குத் நம்மையறியாமலேயே தள்ளப்படுகிறோம் என்பதும்  மறுக்கமுடியாது.

பரிசுப்பொருட்கள் இன்று தனியார் அலுவலகங்களில் எழுதப்படாத சட்டமாகவே ஆகிவருகின்றது. அப்படி வழங்காதவர்களிடம், என்ன இந்தமுறை, புத்தாண்டிற்கு ஒன்னும் கவனிப்பு இல்லையே என கேட்கவும் செய்கின்றனர். இது மனதிற்கு வருத்தத்தையே அளிக்கிறது. பண்டிகை என்பதே இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு வழங்கி அவர்கள் முகத்தில் காணப்படும் புன்னகையை கண்டு மகிழ்வதே.  ஆனால் இன்றோ,  இருப்பவர்கள், இருப்பவர்களுக்கு கொடுத்து மகிழ்வதே மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு அலுவலக ஊழியர், தமது மேலாளருக்கு அவருக்கு ஏற்ற வகையில் வழங்குவது, வாடிக்கையாளருக்கு ஒரு நிறுவனம் பரிசுப்பொருள் வழங்குவது எல்லாம் அதுவும் மகிழ்ச்சிக்காக மட்டுமே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என கூறவியலாது.  எதையோ எதிர்பார்த்து கொடுப்பது, வாழ்த்துவது வாழ்த்தாகுமா..? நமது இந்தப்பயணம் சரிதானா..? சிந்திப்போமா..?  ஏதோ ஒரு எதிர்பார்ப்பிற்காக, சம்பிரதாயத்திற்காக பரிசுகள் வழங்குவதையும், ஏற்பதையும் தவிர்த்து வாழ்த்துக்களை மட்டும் பகிர்ந்துகொள்ள முன்வர முயற்சிக்கலாமே...!!

இதே நிலைதான் பிறந்தநாள் விழாவிலும்.  இன்று குழந்தைமுதலே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதுபோல் தோன்றுகிறது.. யார் என்ன பரிசு கொடுத்தார்கள், என்ற ஒப்பீடு, அதற்கேற்ற ஒருமரியாதை, அன்பு செலுத்துதல். (இது  அக்கம்பக்கத்தில் காணப்படும் உண்மை.)  குழந்தைகள் முதலே நல்லதை சொல்லிவளர்ப்போமே. நம்மால் இயன்றவரை பிறருக்கு உதவி செய்யலாம், பிறந்தநாள் அன்று, வசதியற்ற குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுத்து மகிழ்வதை கற்றுத்தருவோம். ( குழந்தைகளின் பிறந்தநாளை பரிசுப்பொருள் ஏற்காமல், மகிழ்ச்சி, வாழ்த்துப்பரிமாற்றத்திற்கு மட்டுமே  என்பது போன்று கொண்டாடலாம். குழந்தைகளும் வேற்றுமை நீங்கி, எதிர்பார்ப்பற்று இருக்க பழகுவார்கள். இது எமது தனிப்பட்ட கருத்து.)

இனியாவது வாழ்த்தையும், வியாபாரத்தையும் இணைத்து வாழ்த்துக்கள் சம்பிரதாயத்திற்கு என்று இல்லாமல் மனப்பூர்வமாக வாழ்த்த முயற்சிப்போமே...

2 comments:

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__