முகப்பு...

Saturday 7 April 2012

மனம்.....



ஐந்து வயதில்
அழகிய  பொம்மைக்காய் ஏங்கிய மனம்..
அப்பா வாங்கிக்கொடுத்ததும்
அதிசயமாய்ப் பார்த்த மனம்..



ஆறு வயதில்
ஆற்றில் நீந்த ஆசைபட்ட மனம்..
நீரின் ஆழத்தைக் கண்டு
அஞ்சிய  மனம்...

ஏழு வயதில் மிதிவண்டி ஓட்ட
நினைத்த மனம்..
நெருங்கியவுடன் நடுங்கிய மனம்...

எட்டு வயதில் எட்டி நின்று..
வீர விளையாட்டை
வேடிக்கை பார்த்த மனம்..
விரும்பி சேர்ந்து விளையாட விரும்பா மனம்..

பள்ளிசெல்லுமுன்
பிரபஞ்சத்தையே அறிய விரும்பிய மனம்
பின் படிப்பே சுமையாய் உணர்ந்த மனம்..

பருவத்தில் காதலை தூரமாய் இரசித்த மனம்..
பயத்தால் நெருங்க மறுத்த மனம்..

பாதியிலே படிப்பை மறுத்து..
பணியை நாடிய மனம்..
படிப்பினருமை உணர்ந்து
படிக்க விரும்பிய மனம்...

உல்லாசமாய் சுற்றித்திரிந்த மனம்..
விவாகத்தால்...,
ஓரிடத்தில் அமைதியாய் ஆன மனம்...

உறவுகளை நோக்கி பயணித்த மனம்..
வரவே உறவென்பவர்களிடையே வாழும் மனம்...

கட்டுக்கடங்கா கோபத்தைக்
கொண்ட மனம்....
கணவனுக்காய் கோபத்தைக் கட்டுக்குள்
வைத்த மனம்..

உலகமே வீடாய் எண்ணும் மனம்..
வீடே உலகமாய் கருதும் மனம்..

பேசும் கலையறிந்த  மனம்...
பிறர் பேசுவதை மட்டும் ரசிக்கும் மனம்...

தாயின் அன்பைச் சுமந்த மனம்..
தாயாய் ஆக விரும்பிய மனம்..
தலைச்சன் பிள்ளையிழந்து வருந்திய மனம்..
தனக்கென பிறந்தவளுக்காய் மாறிய மனம்...

ஆண்டுக்கொரு பிள்ளைப் பெற்று..
வளமாய் வாழ விரும்பிய மனம்..
ஒன்றே போதுமென ஒருமித்து
வாழத்தொடங்கிய மனம்...

வாரிசுக்காய் வாழும் மனம்..
வயோதிகத்தைக் கண்டு மருளும் மனம்..

பருவத்தே காதலுக்காய் பயந்த மனம்..
காலன் வரும் வேலையில் காதல் கொள்ளும் மனம்..
இச்சாமரணம் கிட்டாதோவென ஏங்கும் மனம்..
கிட்டும்போதே கிட்டும் மரணம்
என எண்ணும் மனம்..

ஓடும் மனத்தை
அடக்க நினைக்கும் மனம்..
அடங்க மறுக்கும் மனம்..
அடங்க மறுக்கும் மனத்தை அடக்கி
அமைதியடைய நினைக்கும் மனம்...

தாவும் மந்தியாய் மனம்..
இதையும்,அதையும் விரும்பும் மனம்.
நொடிக்கொரு விருப்பம் விரும்பும் மனம்..
மாற்றத்தை மட்டுமே கொண்டதுதான் மனமோ.....!!!
??

1 comment:

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__