முகப்பு...

Wednesday 28 November 2012

லட்சுமி...



வசுமதிக்கு இரண்டு நாட்களாகவே லட்சுமி பற்றிய கவலைதான். லட்சுமி இவர்கள் வீட்டில் 20 வருடங்களுக்கும் மேலாக குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக இருந்து வரும் பசுமாடு.  சில ஆண்டுகளா கறவை மறத்துப்போச்சு.

நேற்று காலை கணவன் வசந்தன் வசு, லட்சுமிய இன்னும் இரண்டு நாட்கள்ல வந்து அழைச்சிக்கிட்டு போயிடுவாங்க.”  ”ஏங்க இப்ப எதுக்கு இப்படி ஒரு முடிவு எடுத்தீங்க..? வேற என்ன செய்ய சொல்ற..கறவையும் நின்னு போச்சுவிக்கற விலைவாசில அதுக்கு புல், வைக்கோல், புண்ணாக்கு பார்த்துக்க ஆளு கூலி இதெல்லாம் தேவையா..??அதான் எனக்குத் தெரிஞ்ச ஒரு நண்பன்கிட்ட சொல்லி அவன் மாட்டை விற்ற அதே இடத்தில் இதையும் அனுப்பிடறதா முடிவு செய்து வர திங்கட்கிழமை வரச்சொல்லியிருக்கேன்..

அதற்கு மேல் அவரிடம் பேசி எந்தப்பிரயோசனமும் இல்லை எனப்படவே செய்வதறியாது உள்ளுக்குள்ளேயே வேதனைப்படத் துவங்கினாள்.

நினைவுகள் பின்னோக்கிச் செல்ல... 20 வருடங்களுக்கு முன்பு வீட்டில் குடும்பத்தில் ஒன்றாய் அங்கம் வகிக்கத் துவங்கியது லட்சுமி.  வசு, லட்சுமி கத்துது பாரு..அதுக்கு சாப்பிடக்கொடுத்தியா..என்று பார்த்து பார்த்து உணவு வழங்கிய வசந்தனா இன்று லட்சுமியை அடிமாட்டிற்கு அனுப்பிவைக்கத் துணிந்தார் நம்ப முடியவில்லை அவளால்.. அத்தை பார்வதியும் தினமும் மாட்டுத்தொழுவத்தில் கோலமிட்டு சாம்பிராணி போட்டு அகத்திக்கீரை கொடுக்காமல் காபி கூட சாப்பிடமாட்டாள். அவ்வளவு பாசம். அழகோடு சாந்தமும் நிறைந்து பார்க்கவே பெயருக்கு ஏற்ப லட்சுமிகரமாக காட்சியளித்தது.  

அதன் முகத்தில் விழித்து சென்றால்  காரியம் கைகூடும் என்ற நம்பிக்கை கொண்டனர்.  அனைவரும் தினமும் அதைக்கொஞ்சி, பூசித்து வந்தனர். குழந்தைகளும் அதனோடு சரிக்கு சமமா விளையாடும்.  குழந்தைகளைக்கூட முட்டாது.அவ்வளவு சாது.  தினமும் 6 படி பால்கறந்த லட்சுமி எவ்வளவு வருமானமும், மகிழ்ச்சியும் ஈட்டிக்கொடுத்தது..??  இன்று அதையெல்லாம் மறந்து எப்படி இந்த மனிதரால் சகஜமாக இருக்க முடிகிறது, லட்சுமியைத் தடவிகொடுத்தவாரே கண்ணீர் வடிக்க, அதுவும் முகத்தை ஆட்டி ஆட்டி ஏதோ சொல்வதுபோல் தோன்றியது வசுவிற்கு.

வசு, அம்மா வசு...அத்தையின் குரல் ஈனஸ்வரமாய் ஒலிக்க, வந்துட்டேன் அத்த குரல் கொடுத்தவாறு உள்ளே சென்றாள்.  சாப்பிட்டியா வசு..? பார்வதி வசுவிற்கு மாமியாராக என்றுமே இருந்தது இல்லை..பெற்ற தாயைப்போன்றே அன்பைப்பொழிபவள்.

இல்ல அத்தை பிடிக்கல.ஏம்மா..ஒத்த ஆளா இந்தக்குடும்பத்த கவனிக்கிற. நீ நேரத்திற்கு சாப்பிட வேணாமா..?உடம்பு என்னத்துக்கு ஆவறது..? ம்ம்... இந்தக்கடவுள் என்னத்தான் இப்படி முடமாக்கி நடமாட விடாம வச்சிருக்கான்.  நீதான உன்ன கவனிக்கனும் விழிகளில் நீர் கோர்த்துக்கொள்ள பார்வதி மருமகளைக் கடிந்தாள்.  மனசே சரியில்ல அத்த...என்னாச்சு வசு..?? நான் ஒருத்தி 2 வருடமா உங்க யாருக்கும் பிரயோசனம் இல்லாம போயிட்டன் இல்ல..?

ஏன் அத்த அப்படி சொல்றீங்க..நாங்க எப்பவாச்சும் உங்க கிட்ட அப்படி நடந்திருக்கமா..? வசு கண்ணீர்மல்க வினவ...பின்ன என்னம்மா நீ சாப்பிடாம மனசு சரியில்லைன்னு இருக்க..அப்ப என்னமோ இங்க நடந்திருக்கு எனக்கு சொல்லனும்னு உங்களுக்குத் தோனலைதான..?” அத்த நீங்களே உடம்பு முடியாம இருக்கீங்க..சொன்னா நீங்க வருத்தப்படுவீங்கன்னுதான் சொல்லவேண்டாம்னு இருந்துட்டேனே தவிர உங்கமேல உள்ள மரியாதை என்றைக்கும் குறையவில்லை..நம்ம லட்சுமி 2 வருடமா சும்மா இருக்காம்.. தெண்டச்செலவாம். அதான் வந்தவிலைக்கு அடிமாட்டுக்கு அனுப்பறதா உங்க பிள்ளை சொல்லியிருக்கார்..நான் எவ்வளவோ மறுத்தும் பிடிவாதமா இருக்கார் அத்த..அதான் கவலையா இருக்கு.

அடிப்பாவி பெண்ணே, எவ்வளவு பெரிய கொடுமை நடக்கவிருக்கு இதைப்போய் நான் வருத்தப்படுவேன்னு மறைக்கப்பாத்தியே.. நீ ஒன்னு செய்..உம்புருசனுக்கு போனப்போட்டு நான் ரொம்ப சீரியசா இருக்கிறதா சொல்லி வர வை..அய்யோ எதுக்கு அத்த இப்படி சொல்ல சொல்றீங்க..ஒரு நேரம் போல இல்லாம பலிச்சுடப்போவுது. அதெல்லாம் ஒன்னும் ஆவாது சொல்லு...சரி அத்த என்றவள் கணவனுக்கு போன் செய்து..என்னங்க அத்தைக்கு ரொம்ப சீரியசா ஆயிடுச்சு, நீங்க உடனே வாங்க..நம்ம டாக்டருக்கும் போன் செய்துட்டேன்..அவரும் கிளம்பிட்டார்..இதோ வரேன் வசு, அம்மாவை கவனமாப் பார்த்துக்க.

போன் செய்த அரைமணியில் வீட்டிற்குள் நுழைந்தவன்..என்னாச்சு அம்மாவிற்கு காலை கூட நல்லாத்தானே இருந்தாங்க என்றவாறே அம்மாவின் அறைக்குள் சென்றான்.  பார்வதியை பரிசோதிக்கும் மருத்துவரிடம், டாக்டர் என்ன ஆச்சு..?.  இரண்டு வருடமா பெட்லயே இருந்ததால பெட்சோர் அதிகமாயிடுச்சு.  இனி அவங்களால இயல்பா இருப்பது கஷ்டம்..என்னதான் நீங்க நல்லா பார்த்துக்கிட்டாலும் 24 மணிநேரமும் கூட இருக்கும்படி ஒருத்தர நியமிக்கனும்.  தினமும் இந்த ஊசி போடனும், லோசன் தடவனும்..அதுக்கு நிறைய சிலவாகும்.  பக்கவாதம் பலமா தாக்கினதால இனி இவங்களால எழுந்து நடமாட முடியாதுன்னு உங்களுக்கு தெரிஞ்சவிசயம்தான் இருப்பினும், பெட் சோர் வராம, அவங்கள பார்த்துக்கனும்னா நிறைய சிலவாகும்..என்ற டாக்டர் என்கிட்ட ஒரு யோசனை, என்ன டாக்டர் சொல்லுங்க அம்மா நலனுக்காக எதுவும் செய்யத் தயாரா இருக்கோம்.

அம்மாவை கருணைக்கொலை செய்திடறதுதான் நல்லதுன்னு எனக்குத் தோனுது.  இனி இவங்களால எதுவும் பிரயோசனம் இல்லை. அதோடு இவங்கள பார்த்துக்க சிலவு, நேரம், உடல் உழைப்புன்னு தேவையா யோசிச்சு சொல்லுங்க என்ற டாக்டரின் சட்டையை ஆவேசமாகப்பிடித்தான் வசந்தன்.

நிறுத்துடா..அம்மாவின் குரல் கேட்க அதிர்ச்சியுடன் திரும்பிய வசந்தன் அம்மா நீயா பேசின என்றான் ஆச்சரியத்துடன்..ஆமாண்டா நான் தான். அவர ஏண்டா சட்டைய பிடிச்சுக் கத்தற..? உன்ன உன்னப்போயி விக்கினான்..நான் தான் அப்படி சொல்லச்சொன்னேன்..

நீயா..? ஏன்மா..? உன் மகன் அவ்வளவு சுயநலக்காரன்னு நினைச்சியா..?

பின்ன என்னடா, உன்னோட அம்மா இரண்டு வருடமா பக்கவாதத்தில படுத்திருக்கேன்..என்னால எந்த பிரயோசனமும் இல்லைன்னு தெரிஞ்சும் இவ்வளவு செலவு செய்து அன்பா பாத்துக்கறியே.. நம்ம லட்சுமியும் என்ன மாதிரி ஒரு உசிர்தானடா..?அதுவும் நம்ம குடும்பத்தில ஒன்னாத்தான இவ்வளவு ஆண்டுகாலமா இருந்து வருது.. எப்ப அத அடிமாட்டுக்கு அனுப்ப துணிஞ்சிட்டியோ, என்னையும் கருணைக்கொலை கொல்லவேண்டியதுதானே..ஏன்யோசனை..??

அம்மாவின் இந்த வார்த்தைகள் அவனை பளார் பளாரென அறைந்தது போல் இருக்க, வருந்தியவன்,” மன்னிச்சுக்கோம்மா, ஏதோ அவசரப்பட்டு புத்தியிழந்துட்டேன்..இனி அப்படி யோசிக்க மாட்டேன். “  வசு,நீயும் என்னை மன்னிச்சிடும்மா.  தன் நண்பனை அழைத்து லட்சுமியை விற்கப்போவதில்லை  என்ற தங்கள் முடிவைத் தெரிவித்து, மாட்டு வியாபாரியை வரவேண்டாம் எனக்கூறினான். 

வசுமதி அத்தை பார்வதியின் கரம் பிடித்து கண்ணீர் விட, அதில் இருந்த நன்றியை உணர்ந்தாள் பார்வதி.


6 comments:

  1. அவைகள் நமக்கு உதவுவதால் மட்டுமில்லை...

    அதையும் தாண்டி ஒரு அன்பு இருக்கும்...

    இதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்...

    ReplyDelete
  2. //அதையும் தாண்டி ஒரு அன்பு இருக்கும்...

    இதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.// மிகவும் உண்மை சகோ..நன்றி

    ReplyDelete
  3. நெஞ்சை நெருடும் அருமையான கதை... ஐந்தறிவு விலங்கினங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு, உயிரும் மதிப்புடையது என்ற கருத்தை வலியுறுத்தியமைக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழர்...தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றியும், மகிழ்ச்சியும்..:)

      Delete
  4. நெஞ்சை நெகிழ வைத்த கதை அருமை.
    பாத்திர படைப்புகள் அருமை.
    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தோழமையின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றியும், மகிழ்ச்சியும்.._/\_

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__