முகப்பு...

Tuesday 24 September 2013

பயணங்கள்...!!!



ஆதவன் கண்விழிக்க 
அவசர அவசரமாய்
படிப்பதற்கு சிலரும்
படிப்பிக்க சிலருமாய்
பள்ளிக்குப் பயணம்..!!

அடிமையென பணிபுரிவதே
அன்றாடக் கடமையென சிலர்...
பணியாளர்களின் 
குருதி சுவைக்க சிலரென
அலுவலகத்திற்குப் பயணம்...!!

இல்லத்துப்பணி முடித்து..
பிற இல்லப்பணி முடிக்க
பணிப்பெண்களின் பயணம்..!!

இல்லத்து வேலைகளும் 
இன்னலெனக் கருதி
நட்புகளுடன் பொழுதுபோக்க 
இல்லத்தரசிகளின் 
கடைவீதிப் பயணம்..!!

பிறக்கப்போகும் குழந்தைக்கும்
தாயுக்குமான பிரார்த்தனையோடு 
சிலரின் பயணம்..!!

பிறந்த குழந்தையை
காணச்செல்லும் பயணம்..
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு
பயணம்..!!

எவரும் அறியாவகையில்
காதலன் காதலியின் 
முகத்திரையிட்ட பயணம்..!!

பகிரங்கமாய் காதல்வெளிப்படுத்தும்
கன்னியர்களின் துணிச்சல் பயணம்..!!

படிப்பு முடித்தவர்களின்
பணிதேடும் போராட்டப் பயணம்..!!

அரசுக்கெதிரான போராட்டப்பயணம்..
போராட்டத்தை ஒடுக்க அதிகாரிகளின் பயணம்...!!

திருமணக் கனவுகளை சுமந்தபடி
இல்லற வாழ்க்கைத்தேடிய பயணம்..!!

திருமண முறிவுக்கென
நீதிமன்றம் நோக்கிய பயணம்..!!

உறவுகள் வளர்க்கும் உன்னதப் பயணம்..!!

விடுமுறைக்கழிக்க
குடும்பத்துடன் சுற்றுப் பயணம்..!

உள்சுமந்து உள்ளத்தில் சுமந்தோரை
முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் பயணம்..!!

அவசர சிகிச்சைக்கென 
அனுமதிக்கப்பட்ட அன்புடையோரை 
பார்வையிடும் பயணம்..!!

ஆன்மதேடலின் 
ஆன்மீகப் பயணம்..!!

இவ்வுலகம் துறந்தவர்களின் 
இறுதிப் பயணம்..
இறுதிப் பயணத்தில் 
ஈடுபடப் பயணமென

நிரந்தரமில்லா 
வாழ்க்கைப் பயணத்தில்
வலி, மகிழ்ச்சி, துன்பம்
பாராட்டு, இகழ்ச்சி, சூழ்ச்சி
ஏமாற்றம், எதிர்பார்ப்பு,
நட்பு, எதிர்ப்பு,உறவு,பிரிவு..
பிறப்பு, இறப்பென...
ஒவ்வொரு நாளும் 
ஆயிரமாயிரம் கனவுகள்
சுமந்தபடி அன்றாடம்
மேற்கொள்ளப்படும் பயணங்கள்
அணுதினமும் தொடர்கிறது
எதைத்தேடுகிறோம் என்றறியாமல்
எதையோ தேடியபடியே...!!



14 comments:

  1. கனவுகளின்றி தொடங்கும் பயணத்தில் எந்தவித சுவாரஸ்யமும் இல்லை...

    அழகிய கவிதை

    ReplyDelete
  2. பயணம் - உண்மைகள்.... முடிவில் அற்புதம்...

    அன்புடன் DD

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Desire-Greedy.html

    ReplyDelete
  3. இறந்த பிறகும் கூட தொடர்கின்றன பயணங்கள்! பயணங்கள் முடிவதில்லை! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. பயணங்கள் என்றும் ஓய்வதில்லை. அழகான படைப்பு. பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா..தங்கள் வாழ்த்து எமது எழுத்தை வளர்க்கட்டும்.._/\_

      Delete
  5. ஒவ்வொரு நாளும்
    ஆயிரமாயிரம் கனவுகள்
    சுமந்தபடி அன்றாடம்
    மேற்கொள்ளப்படும் பயணங்கள்

    அணுதினமும் தொடர்கிறது
    எதைத்தேடுகிறோம் என்றறியாமல்
    எதையோ தேடியபடியே...!!//
    அருமையான பயணக் கவிதை.

    ReplyDelete
    Replies
    1. எமது தூரிகையில் தொடர்ந்து பயணிக்கும் தங்களுக்கு நன்றி..:)

      Delete
  6. எதைத்தேடுகிறோம் என்றறியாமல்
    எதையோ தேடியபடியே!..

    சிந்தனைக்குரிய சிறப்பான வரிகள்.. நல்ல கவிதையுடன் பயணம்.. அருமை!..

    ReplyDelete
    Replies
    1. எமது கவிப்பயணத்தில் பயணிப்பதற்கு மகிழ்ச்சியும், நன்றியும்..:)

      Delete
  7. எந்த வினாடியும் முடிவடைந்துவிடும் வாழ்க்கை பயணத்தில் தேடுவதெதுவென தெரியாமல் தேடிக்கொண்டிருக்கும் பயணம் பற்றிய கவிதைக்காக கவிதாயினி தேடி கண்டுபிடித்திருக்கும் வரிகளின் பயணமானது ஆதிமுதல் அந்தம்வரை அருமை.

    நிரந்தரமற்ற வாழ்க்கையில் விதவிதமான எதிர்பார்ப்புகளுடன் வாழும் நாட்களில் அதிகாலை முதல் நள்ளிரவுவரையிலும் வினாடிக்கு வினாடி பயணிக்கும் வாழ்க்கை பயணத்தின் அனைத்து சுவாரஸ்யங்களையும் சொல்லப்பட்டிருக்கும்விதம் வியப்பூட்டும் விதத்தில் இருக்கிறது.
    மட்டுமல்ல வாழ்க்கை பயணத்தின் அனைத்துவிசயங்களையும் எடுத்துரைக்கும் விதத்தில் பதியப்பட்டிருக்கும் சில காட்சிகளடங்கிய ஒரு படமும் அருமை. வரிகளுக்கேற்ற படத்தேர்வு படத்தேர்விற்கு தனி விருப்பம் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கவிதைக்கும்
    கவிதை எழுதிய கவிதாயினிக்கும்,
    கவிதக்கேற்ற படதேர்விற்க்கும் பாராட்டுக்கள்.
    தொடரட்டும் தங்களின் நிரந்தரமான கவிதைபயணம்.
    தொடரும் இந்த ரசிகனின் பயணமும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆனந்த்...எமது தூரிகையின் கவிப்பயணத்தில் நிரந்தரப்ப்யணியாய் பயணிப்பதற்கு நன்றி..:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__