முகப்பு...

Wednesday, 8 August 2012

என்னவன்...!!


என்னவனே...!!
நீ
எனை
அம்மு என அழைத்து
உன்மீது அன்பொழுகச்செய்து...

செல்லம் என அழைத்து எனை
சினுங்கச்செய்து.....
தங்கம் என அழைத்து
எனை காதலில் துவளச்செய்து....
அடியே என அழைத்து
அணைக்கத்தூண்டி....

ஒவ்வொரு அழைப்பிலும்
ஓராயிரம் உணர்வுகளை
உணர்த்துபவன்….

மரியாதையில் விளிக்க
கோபத்தில் நீயிருப்பது
குரலில் ஒலிக்க….!!

சிவந்த
உன் கண்மலர்களில்
முத்தமிட்டு
கோபம் தணிக்க
எத்தனிக்கும் என் மனம்
உன்னருகில் இல்லாத எனை
எள்ளிநகைக்கிறதே
என்செய்வேன்.......??


Sunday, 5 August 2012

நட்பு.....!!!



பிறவித்தோட்டத்தின்..
வாழ்க்கைப்பயணத்தில்
நட்பெனும் விதைவிதைக்க...

பூந்தோட்டமாய்
விளங்கும் பயணம்..
மணம் வீசி மனம் கவரும்
மல்லிகையும், மரிக்கொழுந்துமாய் சிலர்..!!
பறிக்கும்போது தைத்து
சூடும்போது மகிழ்ச்சியளிக்கும்
ரோசாமலருமாய் சிலர்..!!

கண்கவர் கனகாம்பரமுமாய் சிலர்..
மணமில்லாவிட்டாலும்
மலருக்கான அழகுதான் குறையுமா....?

குளிர்ச்சியூட்டும்
தாமரையாய் சிலர்..!!
மலர்களோடு 
கனிகளும் கனிந்திருக்கும் தோட்டத்தில்..
சுவையூட்டும் 
வாழையும்பலாவுமாய் சிலர்.....!!

இனிப்பும்,புளிப்பும் கலந்த
மாங்கனியாய் சிலர்...!!
தலைமுறை தாண்டி பலனளிக்கும்
பனையும்தென்னையுமாய் 
நீண்ட பயணத்தில் துணையாய் சிலர்...!!

கசந்த வேம்பின் சுவைதவிர்த்து 
குணம் விரும்ப
குளிர்ச்சியூட்டிஇதமளிக்கும் 
தென்றலாய் சிலர்...!!

என் தோட்டத்தில் 
விதவிதமாய் கனிகளை விளைவித்து
மலர்களை மலரச்செய்த
நட்புகளுக்கு......
நன்றியெனும் நீரூற்றி..
அன்பெனும் எருவுஞ்சேர்த்து..
அழகிய மலர்ச்செடியை 
நட்பின் தோட்டத்தில்
நானும் பதியமிடுகிறேன்.. ....!!!





Saturday, 4 August 2012

விழலாகும் விழுதுகள்...



அறிஞனாய் விளங்கி.
ஆலமரமாய் தழைப்பானென்ற
பெற்றோருமங்கே கனவினிலே...

விதியின் விளையாட்டோ..
பெரும்பணக்காரனின் சூழ்ச்சியோ..
அரசியல்வாதியின் சதியோவிது...?
எவனோ பின்னிய வலையில்
போராட்டமே வாழ்வாகி...
இரையாகிப்போனானே இவனும்.....!!

கோடியில் வருமானம்..
வாழ்வதோ காட்டினிலே...

அந்நிய நாட்டின் சதியிலே
அஞ்ஞாத வாசமடைந்தானே இவனுமிங்கே...

நக்சலைட்டு, தீவிரவாதியென
பாரினையும் கலங்கவைக்கும்.
பட்டமும் பெற்றானே....!!

எவனோ உல்லாசமாயிருக்க
இவன் போராடுவதேனோ
எமனிடம்.....!!

அனாதைப்பிணமாய்
எங்கோ மரணிக்கவா
இப்பிறவி எடுத்தான்....??

இரயில் கவிழ்ப்பு,
பேருந்தில் குண்டு...
விமான கடத்தல்...
கட்டிடத் தகர்ப்பென
சதியில் சிக்கிய நின் சதியால்
விதிக்கு ஆளாகி..
விழலாகிய விழுதுகள்தான்
எத்துனை..?? எத்துனை..??

வாரிசிழந்து வாடும் வயோதிகர்கள்..
கணவனையிழந்து கதிகலங்கிடும் பெண்..
பால்மனம் மாறா பச்சிளங்குழந்தை.
தாயிழந்து தவிக்கும் குழந்தை
பணயக்கைதியாய் பரிதவிக்கும்
பள்ளிக்குழந்தைகள் என..
பலிவாங்கும் நீ
அகோர பசிகொண்ட அரக்கனோ..??

தாய்ப்பால் குடித்த உனக்கு
குருதி சுவைக்கும்
எண்ணமும் வந்ததேனோ....??

பந்தமிழந்த நீயும்
பாசத்தின் ஆழத்தை அறிவெதெப்படி.....??

விதியின் விளையாட்டோ..
வீணர்களின் சதியோ..
விழித்துக்கொள்வாய் வீரனே..!!

வறுமை, சூழ்ச்சி, அரசியல்..
விதியென
நின்சதிக்கு காரணம் கூறுபவனே..!!
நீயும் மனிதனாகக் காரணம்
தேடாததேனோ........??

விழலாகிப்போனதுமேனோ
நின் வாழ்க்கை ...??






Thursday, 2 August 2012

வலி.....


  
வலி என்ற வார்த்தை வலிக்காது...
தன் வலியை,வலி அடைந்தவன்
வலி கொடுத்தவனுக்கு

வலியை வலியாக உணர்த்த..
வலி கொடுத்தவன்.
 வலியை வார்த்தையாக இல்லாமல் 
வலியை வலியாக உணரும்போது
வலியின் வலி புரியும்..
அவன் வலியை உணர.,
நீயும் வலியை வலியாக கொடுக்காமல்
வலியின் வலியை புன்னகையால் புரியவைத்து..
மனிதத்தை நிலைநிறுத்து....

உணர்வுகள்...??


உன் மௌனம்
எனை மரணிக்கச்செய்ய
உள்ளத்தால் மரணித்து...

நின் நினைவில்
நினைவிழந்து
கொதிக்கும் நீரில் கைவிட
குளிர்கிறது...

என் குரல் கேட்கவிரும்பா உனை
குளிர்விக்க குளிர்பானமாய் கொதிக்கும்
பாலருந்துகிறேன்...

செய்தியனுப்பும் விரல்களோ
கத்தியை முத்தமிட
கசியும் குருதியோ..
என் கண்ணீரை கேளி செய்ய..

உன்கைபட்ட புடவையும்..
கதைகளாயிரம் கூற...
காதலுடன் கட்டியணைத்து
முத்தமிடுகிறேன் நித்தமும்.....

நீ விரும்பும் மௌனத்தை
நானும் தரிக்கிறேன்
மரணித்தவளுக்கு
மௌனிப்பதும் கடினமா ...??

நடுவீதியில் நிர்வாணமாய்
உணர்த்தும் உன் அலட்சியம்...

உணர்வை உணர்வால் உணர்ந்தவள்
ஊமைகண்ட கனவாய்
உணர்வை வெளிப்படுத்தும்
வார்த்தை ஜாலமறியாப் பேதையாய்...

நின்காதலில் கசிந்துருகும்
எனை சோதிப்பது
காலமா...?? காதலா..??
என் காதலா...!!!??

கால சுழற்சி.....!!!


அமைதியான மையிருட்டு வேளையில்
ஆதவனின் உறக்கத்திலே..    
மலரத் துடிக்கும் மொட்டுக்கள்
காதலனுக்காக காத்திருக்க....!!

இயற்கைசூழ்ந்த பூமிதனை..
மரம் காக்கும் மனிதம் மெச்சியே
குளிர்விக்க எல்லையில்லா மகிழ்ச்சி
கொண்டே..
வர்ணனும் வஞ்சப்புகழ்ச்சியில்
வார்த்தையில் விளையாடுகிறான்..

அதிகாலை அமைதிபோக்கி
அலரும் வாகனம்...
சேவல் கூவிய இடத்திலே
கடிகாரத்தின் கூக்குரல்..

சாணம் தெளித்த வாசலும்
சிமெண்ட் பூச்சில் மறைந்திருக்க..
சுப்ரபாதம் ஒலித்த வீடுகளில்
நடிகையுடன் நேருக்கு நேர்...

சாம்பிராணி மணம் வீசிய
வீடுகள்..
செயற்கைத் திரவியத்தில் மணக்க..

வேம்பின் தென்றல் தழுவிய மேனியை
குளிர்சாதனத்தின் குளிர் தீண்ட..

நீராகாரத்தில் தொடங்கிய காலை
காஃபியிலும், தேனீரிலும் துவங்க..

பழைய சாதம், வெங்காயம்..
அவிச்ச இட்லி, மல்லி சட்னியென
மணத்த காலைஉணவு..
மைதா ரொட்டியில் துவங்க...

வயிறைக் குளிர்வித்த
மண்பானைத் தண்ணீரோ..
பல்கூசி உடல் சூடுண்டாக்கும்
குளிர்பதனப்பெட்டியியிலே...

வாழையில் மடித்த மதிய உணவும்..
நெகிழிப்பைக்கு நிரந்தர அடிமையாக...

நிதானமாய் நகர்ந்த நாட்களுமே
நிற்க நேரமில்லாமல் ஓட..
எதை நோக்கியிந்த ஓட்டம்..
எங்கேயிந்த ஓட்டம்..
எவருமறியா ஓட்டமிது...
நாய் அறியா வேலையாய்...
நகருகிறது நாட்களுமே..!!!

எண்பதிலும் துள்ளித்திரிந்தவர்கள்..
ஐம்பதில்கூட உதவிக்கு ஆள் அழைக்க...
எருமையில் வந்த எமனுமின்று..
வாகனத்திலும், நோயிலும்
உருமாறி தன்நிறமாற்றி
எள்ளிநகையாடியே எடுத்துச்செல்கிறான்
எளிதாக...!!!
காலத்தின் சுழற்சியில் கற்றதுதான் என்ன...??



Wednesday, 1 August 2012

நம்பிக்கை....


காட்டாற்று வெள்ளமாய்
லட்சியங்கள் கொண்டவனை... 
காதலெனும் கலசத்தில்
அடைக்க முயலும் பேதை..!!


புத்தியுணர்ந்து..
மனம் மறுத்து...
புத்திக்கும், மனத்திற்குமான
போராட்டத்தில் தோற்றுப்போகிறேன்.......!!

தோற்பதும் மகிழ்ச்சிதான்..
வெற்றிக்கனி உன் வசமாவதால்....!!

*********************************************************

நம்பிக்கை....!!!


நானாகிய அவன்..
நாளை வருவான்
எனை ஆட்கொள்வானென
நம்பிக்கையிடம்
நம்பிக்கை வைத்து
நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்...!!




****************************************************************


சக்தி நீயும்
சக்திதனை கண்ணீரில் கரைப்பதேனோ.....?? 
அன்பின் ஆழம் அறியாதவர்கள்
கண்ணீரின் ஆழத்தை
அறிவதும் சாத்தியமா......??





****************************************************************