முகப்பு...

Tuesday 7 October 2014

உறவுகள் மேம்பட...!!

நட்பு: இதன் விளக்கமும், உதாரணமும் தனிநபர் பொறுத்தது. மனிதருக்கு மனிதர் மாறுபடலாம். நட்பு எந்தக்களத்தில் அமைக்கப்படுகிறது என்பதை கவனித்து, நட்பாக ஏற்றுக்கொண்டவர் எப்படிப்பட்டவர் என்பதை கவனிக்கத் தவறிவிடுகிறோம். விரைவில் துண்டிக்கப்படும் நட்பை ஒப்பிடுகையில் இரயில் சினேகிதம் என கூறுகிறோமே..!! ஏன்…இரயிலில் ஏற்படும் நட்பு நீடிக்கலாகாதா….தாங்கள் தேர்ந்தெடுக்கும் நபரின் தன்மையும், தங்களது பழகும் தன்மையும் சரியாக இருக்குமெனில் தேர்ந்தெடுக்கப்படும் களம் எதுவாக இருப்பினும் நன்றாகவே அமையும்.
இது ஒரு மாய உலகம், நட்பிற்கும், உறவிற்கும் ஏற்றதல்ல…அனைத்தும் பொய் என அவரவர் சிந்தனைக்கேற்ப முகநூலில் கூட பலபதிவுகள் கண்டதுண்டு
ஒரே தாய்வயிற்றில் பிறந்த சகோதரர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்களா..? சண்டையிட்டதில்லையா. ஒருவர் மேல் ஒருவர் வழக்கு தொடுத்ததில்லையா…?!! உறவு அமைந்த களம் நம்பகத்திற்கே பிறப்பிடமான தன் தாய்வயிற்றின் வழி வந்தவர்கள்தானே… பிறகு ஏன் சண்டை பொறாமை எல்லாம்…? ஏனெனில் அங்கு களத்தைவிட தனிமனிதனின் சிந்தனையே மேலோங்கியிருக்கிறது. தியாகங்கள் பல செய்து தன்னை சுமந்து பெற்ற தாயை முதியோர் இல்லத்தில் விடும் உறவுகள் இல்லையா..? இது உறவுகளுக்கு மட்டுமல்ல நட்பிற்கும் பொறுந்தும். சில நட்புகள் தலைமுறை கடந்தும் தொடர்கின்றன.. சில நட்புகள் உதித்த சிலதினங்களில் உதிர்கின்றன. உதிப்பதும், உதிர்வதும் நட்பு மலர்களைக் கையாள்பவர்களிடத்தே உள்ளது. குரங்கிடம் மலர்களைக்கொடுத்து பிய்ந்துவிட்டதன் காரணம் மலர்பூத்த செடி அமைந்திருக்கும் தோட்டம்தான் காரணம் என்றால் எப்படியிருக்கும்..?
முகநூலில் அறிமுகமாகி குடும்ப நண்பரானவர்கள் பலர் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன் இரயிலில் கிடைத்த நட்பு இன்றளவும் மிக அற்புதமாக தொடர்வதுமுண்டு. இங்கும் பலர் உறவுமுறை சொல்லி அழைப்பதை அறிவோம். அதற்கும் வர்ணங்கள் பூசப்பட்டு வருவதைக் காண்கிறோம். இதற்காக அப்படி அழைக்கிறார்கள் அதற்காக அப்படி அழைக்கிறார்கள் என்று.
முன்பின் அறிந்திராத நபராக இருந்தால்கூட பொது இடத்தில் அண்ணாச்சி கொஞ்சம் வழி விடுங்க என்றும் அம்மா என்றும் அவரவர் வயது, தன்மைக்கேற்ப அழைப்பது நம்மில் தொன்றுதொட்டு வருவதை மறுக்க இயலுமா..? குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும்போதுகூட அத்தை பாரு, மாமா பாரு என்றுதானே சொல்வோம். அப்படியிருக்க சமீபகாலமாக முரண்பட்டு சிந்திக்கத் துவங்கியிருப்பது ஏன்… சற்றே சிந்திப்போம்…நாம் தவறியது எங்கே…தவறவிட்டது எதை..?
உறவு சொல்லி அழைப்பது தன்னை தற்காத்து கொள்ள என்பதாகவும், இன்னும் பல பல பதிவுகள் ஆங்காங்கு நம் கண்களில் படத்தான் செய்கிறது. தன்னை தற்காத்து கொள்வது என்பது இயல்பிலேயே இருக்கிறது. .ஒருவரை ஒரு உறவுமுறை சொல்லி அழைத்துதான் தற்காத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதை நாம் உணரவேண்டும்.
ஒரு பெண் திருமணமானபிறகு தன் நண்பனை அறிமுகப்படுத்தும்பொழுது, குழந்தைக்கு மாமா என்று அறிமுகப்படுத்துவதாகவும் பேச்சுகள் வரத்தான் செய்கின்றன. இதற்கு காரணம் என்னவாக இருக்கும் நட்புகளே…? அந்தப்பெண் தன்னை காப்பாற்றிக்கொள்ள அப்படி சொன்னாரா..? என் நண்பர் என அறிமுகப்படுதினால் கண்ணியமாக எண்ணாது, யதார்த்தத்தை ஏற்க இயலாத ஆண் என்பதாலும் அப்படிக்கூறியிருக்கலாம். இன்னொரு காரணம்… ஒரு ஆணை பொதுவா குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும்பொழுது ஆங்கிலத்தில் அங்கிள் என்ற ஒற்றை சொல்லையே பயன்படுத்துகிறோம். தமிழில் கூறும்பொழுது மாமா சித்தப்பா, பெரியப்பா இப்படித்தானே அறிமுகப்படுத்தவேண்டியிருக்கும்..? எனவே எளிதில் மாமா என்று அறிமுகப்படுத்தியிருக்கலாம்.
அண்ணன் என அறிமுகப்படுத்தியிருந்தாலும் அறிமுகப்படுத்தப்பட்ட நபர் அந்த உறவிற்கு ஏற்றவர் இல்லையெனில் என்ன பாதுகாப்பு இருந்துவிட முடியும்.? எனவே உறவோ, நட்போ அவரவர் நடந்துகொள்ளும் விதத்திலும், பார்க்கும் விதத்திலுமே இருக்கிறது. நட்புகளே..!! உறவோ, நட்போ எங்கு ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து அலட்சியப் படுத்துவதைவிட தன்னை நட்பாக உறவாகக் கருதுபவர்களிடம் உண்மையான அன்புடன் இருக்கப்பழகுங்கள்..உறவுகள் மேம்படும்… :)

Monday 6 October 2014

அறிந்ததும்_அறியாததும்...

நம் இருத்தலும் இல்லாதிருத்தலும் எந்தவொரு சலனத்தையும் ஏற்படுத்தாது எங்கு சமன் செய்யப்படுகிறதோ அங்கு நம் இருத்தல் அவசியமற்றதாகிறது. ...
*****
சூழ்ச்சிகளையே ஆபரணமாய் அணிந்தவர்களுக்கு அரிதாரம் பூசப்படாத புன்”னகை” ஒவ்வாமையை ஏற்படுத்திவிடு(ம்)கிறது...
****
நிகழ்வுகளை அதன்போக்கில் வேடிக்கைப் பார்க்க தெரிந்த(கற்ற)வர்களுக்கு வலியும், வேதனையும் இருப்பதில்லை..
****
நேரம் தவறாமையை கடைபிடிப்பவர்களுக்கும், குறித்தநேரத்தில் பணி முடிப்பவர்களுக்கும் கிடைக்கும் பாராட்டுப் பத்திரம் வேலையில்லாதவர்...
****
கடந்துசென்ற காலத்தையெண்ணி
கண்ணீர்விட்டு 
நிகழ்காலத்தை விரயமாக்கியதை
எதிர்காலத்தில் நினைவுகூர்ந்து 
வருந்தநேரிடலாம்...

****
தொலைத்தவற்றை மீட்டெடுப்பதாக எண்ணி, இருப்பதையும் தொலைத்துவிடுகிறோம்...பலநேரங்களில்...
****


குழந்தை..

தன் மனத்தோட்டத்தில் 
மகிழ்ச்சிச் செடிகளை 
நிரந்தரமாய்ப் பயிரிட்டு
புன்னகைப் பூக்களை
மலரச்செய்து
மனதை என்றென்றும் 
மணக்கச்செய்யும் 
குழந்தைகள் 
#பிரமிக்கவைக்கும் அழகு.

ஓவியம்...

அதர காகிதத்தில்
அன்பு மை கொண்டு 
இதழ் தூரிகையால் எழுதிய 
முத்த ஓவியத்தை...
மனத்திரையில் 
காட்சிக்கு வைத்து
அகக்கண்ணால் அழகுபார்க்க...
அழியாத ஓவியத்திற்கு
அணுதினமும் அழகு கூடுகிறது ...!