முகப்பு...

Monday 19 August 2013

சுதந்திரதினக் கொண்டாட்டம் ஒரு பார்வை..


அனைவருக்கும் வணக்கம். என்னடா சுதந்திர தினம் முடிஞ்சு சுதந்திர தினம் பற்றிய பதிவுன்னு கேட்கறீங்க புரியுது. 

சுதந்திர தினம் என்றாலே குழந்தைகளைப் பொறுத்தவரை பள்ளிவிடுமுறை என்ற சந்தோசம. பெரியவர்களைப் பொறுத்தவரையும் விடுமுறை சற்றே சுதந்திரமாக செயல்படலாம் அதோடு தொலைக்காட்சிகளின் சிறப்பு நிகழ்ச்சிகள்.. ஆனா யாரும் சுதந்திர தினத்திற்கும் தொ(ல்)லைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம்னு கேட்கக்கூடாது.

சுதந்திர தினம் என நினைக்கும்போதே நம்மையறியாமல் ஒரு பெருமித உணர்வு ஏற்படுவது மறுக்கமுடியாத உண்மை. நமக்காக தங்களுடைய வாழ்வினையே தியாகம் செய்தவர்களின் வலிகளை எண்ணிப்பார்த்தால் நமக்கும் மனம் வலிக்கவே செய்கிறது. இது ஒருபுறமிருக்க.. திரும்புமிடமெல்லாம் தேசபக்தியைக் காணலாம். வண்ண வண்ணப் பட்டமாகவும், நெகிழியில் தயாரித்த மூவர்ணக்கொடிகளாகவும், ஊதுபைகளாகவும் மற்றும் மூவர்ணத்தில் கையில் அணிந்துகொள்ளும் வளையமாகவும்...!!

சுதந்திர தின கொண்டாத்திற்கு வருவோம். மற்ற இடங்களில் எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியவில்லை. கடந்தசிலவருடங்களாக நான் இருக்கும் இடத்தில் எப்படிக்கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்த்துவந்த அனுபவத்தில் அதை மட்டும் பகிர்கிறேன்.

சுதந்திர தினத்திற்கு சில தினங்கள் முன்பாகவே குழந்தைகளிடம் மூவர்ணத்தில் பேண்ட் (தலைப்பின்னலுக்குப்போடுவது. தற்சமயம் கையில் வளையல் போல் ஸ்போர்ட்ஸ் நேரத்தில் அணிவதற்கு), ஊதுபைகள்(பலூன்கள்), நெகிழியில்(ப்ளாஸ்டிக்) செய்திருக்கும் மூவர்ணக்கொடி. தெருவெங்கும் சிக்னலில் சுதந்திர தினத்தில் (சுதந்திரமாய்..??!!) ஒவ்வொரு வண்டியிலும் தன்னிடமுள்ள கொடியை விற்க ஓடும் சிறார்கள். பள்ளிகளில் மூவர்ணம் கலந்து வாங்கிவந்து பொருட்கள், மூவர்ண ஆடைகள் அணிந்து குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சுதந்திரத்திற்குப் பின் மறைந்திருக்கும் தியாகிகளின் வாழ்க்கை வரலாறு எத்தனை குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டது..?? எத்தனை பிள்ளைகள் இவற்றையெல்லாம் அறிவார்கள் என்பது தெரியாது. நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தில் மறைந்திருக்கும் பலரின் கண்ணீர், உயிர், வலிகள் தெரிவிக்கக் கூடாதா...? கொண்டாட்டம் எனில் ஆடிப்பாடி அன்றைய பொழுதை கழிப்பது மட்டும்தானா..??

அடுத்து குடியிருப்புப்பகுதியின் சுதந்திர தின நிகழ்வு...காலை குடியிருப்புப் பகுதியில் இருக்கும் சிறார்களோடு ஒரு பேரணி...சுதந்திர தின முழக்கத்தோடு பிறகு கொடியேற்றம், குழந்தைகளின் கலைநிகழ்ச்சி சிறிது நேரம். இறுதியாக இனிப்புப்பகிர்தல்.. 


அதன்பின் கொடியேற்றம் நடந்தவிடத்தைப் பார்த்தால் ரத்தக்கண்ணீர் வராத குறைதான். எங்கும் இனிப்பு உண்டதன் வெளிப்பாடாய் பேப்பர், டப்பா..இப்படி எறியப்பட்டிருக்கும். அதோடு கட்சிக்கொடிகள் போல் தற்சமயம் கிடைக்கும் நெகிழிகளில் செய்த போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய நம் மூவர்ணக்கொடிகள். (மூவர்ணக்கொடி துணியில் கொடிக்கம்பில் பறக்கவிடப்பட்டிருந்தால் மட்டும்தான் மதிப்பா அல்லது எந்தப்பொருளிலும் மூவர்ணத்தில் நம் கொடிபோல் செய்திருந்தாலும் அதே மதிப்புதானா(னே)....??!!) எங்கு திரும்பிடினும் கிழித்து கொடி அறுந்து கீழே கால்களில் மிதிப்பட்டுக்கொண்டிருக்கும். இதை கிழித்து எறிந்து மிதிப்பதற்கு எத்துனை பேரின் உழைப்பு..? அந்த உழைப்பு ஆக்கப்பூர்வமாக இருக்கலாமே..? இப்படி எங்கும் கட்சிக்கொடிபோல் கொடிகட்டித் தொங்கவிட்டு ஒவ்வொரு குழந்தை கையிலும் ஒரு கொடி பிடிக்கக்கொடுத்து கொடியேற்றம் முடிந்ததும் அதைத் தூக்கியெறிந்து விட்டு அவரவர் இல்லம் செல்வதுதான் கொண்டாட்டமா என்ற கேள்வியே எஞ்சி நிற்கிறது எண்ணத்தில்..!

சுதந்திர தினத்திற்கும், பட்டம் விடுவதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா...? உண்மையில் தெரிந்துகொள்ளத்தான் இந்தக் கேள்வி எழுப்புகிறேன். ஏனெனில் இங்கு சுதந்திர தினம் வருவதற்கு சில தினங்கள் முன்பிலிருந்தே வண்ண வண்ண பட்டங்களின் விற்பனை கலைகட்டத்துவங்கிவிடும். சிறுவயதில் பட்டம் விடுவதையும், பட்டம் விட்டும் மகிழ்ந்தவர்கள் தாம் இல்லையென்று கூறவில்லை. அப்பொழுது ஆற்றங்கரையில், விளையாட்டு மைதானம் போன்ற வெட்டவெளியில் காகிதத்தில் செய்து சாதாரண நூல்களில் கட்டி பறக்கவிடுவோம்.

நாகரீக வளர்ச்சியில் அனைத்தையும் ஏற்கும் நாம் இதிலும் மாற்றம் ஏற்பதில் தவறில்லை..வண்ண வண்ண பட்டங்கள் நீண்ட நூல்கள் ஏற்க வேண்டியதுதான் மறுக்கவில்லை. ஆனால் தற்பொழுது இங்கு நடப்பது என்ன..?? தடித்த நூல்..அதை அழுத்திப்பிடித்தாலே கையை அறுத்துவிடுகிறது. தெரிந்து எத்தனையோ பிள்ளைகள் பட்டத்தில் நூல் கையறுத்து விட்டதென தையல் போட்டுக் கண்டிருக்கிறேன். இதுதான் நாகரீகமா..தன் மகிழ்ச்சியில் எத்தனையோ நபர்களின் காயங்கள், மன உளைச்சல், பயம், விபத்து இத்தனையும் உள்ளடக்கியதுதான் மகிழ்ச்சியான கொண்டாட்டமா..? அறுந்த பட்டங்களின் நூல்கள் காலில் சிக்காமல் செல்பவர்கள் மிகக்குறைவு. ஏதோ அரையடி ஒரு அடி இருக்காது நூல்கள் குறைந்தது 5மீட்டர், 10 மீட்டர் காலில் பந்து பந்தாக சுற்றிக்கொள்ளும். அது கையையும் அறுத்துவிடாது, காலுக்கும் காயம் ஏற்படாது சிக்கலை விடுவிப்பதுதான் அன்றைய தினத்தின் சவாலாக அமையும். அனைவரும் சென்றுவரும் இல்லக்குடியிருப்பின் பிரதான சாலைகளில் விடப்படும் பட்டம் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கண்முன்னேயும் வந்துசெல்லும். தாழ்ந்திருக்கும் மரக்கிளைகளில் சிக்கிக்கொண்டு அவர்கள் செல்லும்பொழுது கழுத்திலும் உரசிச்செல்லும். இப்படிப்பட்ட ஆபத்தான விளையாட்டு பொழுதுபோக்கை சற்றே மாற்றிக்கொள்ள இயலாதா..? இதையெல்லாம் கற்பிக்கவேண்டியது யார் பெற்றோர்களா..? ஆசிரியர்களா..??
மாணவர்களாக(குழந்தைகளாக) உணர்வார்கள் என்றும் அப்படியே விட்டுவிடமுடியாது...மிக சொற்ப எண்ணிக்கையுடையவர்களே அப்படி தானாகக் கற்க நேரிடும்..

பெற்றோர்களைப் பொறுத்தவரை பிள்ளைகள் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட்டால் பொறுப்பு முடிந்தது என்றும், பள்ளிகளைப்பொறுத்தவரை படிப்புத் தவிர வேறு எதிலும் தலையிடுவது நம் கடமையில்லை என்றும் நினைத்துவரும் காலக்கட்டத்தில் இவர்களுக்கு உண்மையான கொண்டாட்டம் என்ன என்பதையும், ஏன் இந்தக்கொண்டாட்டம் கொண்டாடுகிறோம் என்பதையும், இந்த தினத்தின் சிறப்பையும் உணர்த்துவது யார்...??

பலருக்குள்ளும் இந்தக்கேள்விகள் எழுந்திருந்தாலும் கேள்வி மட்டும் கேட்டுவிடுவதால் என்ன நடந்துவிடப்போகிறது என்பதால் கேட்காது நமக்கென்ன என இருக்கிறோமா..? அல்லது விடையில்லா கேள்வி கேட்டு என்ன செய்வது என்பதாலா..? விடையறிந்தாலும் நம்மால் என்ன செய்துவிடமுடியும்..நம் பேச்சை யார் கேட்கப்போகிறார்கள் என்பதால் கேட்கப்படவேண்டியதும், உணர்த்தப்படவேண்டியதும் உணர்த்தப்படாமலே உணர்ந்தது உணர்வற்றதாய்ப்போகிறதா...???!!

Monday 12 August 2013

சிந்தனைச்சிதறல்கள்...






பொசுக்கப்பட்ட
உணர்வுகளின் சாம்பலில்
கண்ணீர் சேர்த்து
உள்ளத்தூரிகையால்
என் எண்ணங்களை எழுத
கவிதையாய் உன் பெயர்
ஓவியமாய் உந்தன் முகம்..!!
கவிதை படித்து, ஓவியம் ரசித்து
உள்ளம் மகிழ்ந்து
உணர்வுகளை
உயிர்ப்பித்துக்கொள்கிறேன்
ஒவ்வொருமுறை
பொசுக்கப்படும்பொழுதும்.....!

Saturday 10 August 2013

பிரமிக்க வைக்கும் இயற்கை...





வாய் நிறைய 
வழியும் பாலுடன்
அன்னையின் முகம் நோக்கி
புன்னகை சிந்தி
உதட்டோடு உதட்டால் 
முத்தமிட 
தாய்மையை பூரிப்படையச் செய்யும்
பால் மணம் மாறா 
ஈர முத்தம்..!!
--
தேவைக்கதிமாய்
தாயிடம் 
தானருந்திய பாலை
உதட்டோரம் வழியவிட்டு
சிரித்து விளையாடும் 
குழந்தையின் அழகு...!!
--

திரும்பும் குழந்தைப்பருவம்...!!


மழைக்காலத்தை வரவேற்கும் விதத்தில் தீஜ் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது(டெல்லி). இந்த நாள் மாதந்தோறும் அமாவாசைக்கு மூன்றாம் நாள் வருகிறது. ஆடி(ஷ்ரவண அல்லது சாவன்)மாதத்தில் வரும் தீஜ் நாளுக்கு சிறப்பு உண்டு. மழைக்காலத்தில் வரும் தீஜ் பண்டிகை ஷ்ரவண தீஜ் என்றும், பசுமை தீஜ்(ஹரியாலி தீஜ்) என்றும் கூறுகின்றனர்.

ஹரியாணா, ராஜஸ்தான், பஞ்சாப், பிகார், உத்தர பிரதேசம் மாநிலங்களில் தீஜ் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருமண வாழ்வு சிறக்கவும், வாழ்க்கைத் துணைவி, குழந்தைகள் நலம் பெறவும் தீஜ் கொண்டாட்ட நாளில் சிறப்பு பூஜை செய்வது வழக்கம்.

தீஜ் அன்று பெண்கள் பச்சை நிற உடையணிந்து, தோட்டத்தில் உள்ள மரங்களில் ஊஞ்சல் அமைத்து ஊஞ்சலை மலர்களாலும், பசுமைக்கொடிகளாலும் அலங்கரித்து அனைவரும் ஊஞ்சல் ஆடி, நாட்டியமாடி மகிழ்கின்றனர்.

வயதுவித்தியாசமின்றி குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள்(ஆண்கள் கிடையாது) வரை நாட்டியமாடியும், ஊஞ்சல் ஆடியும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவதைக் காண்கையில் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளவே செய்கிறது. இவர்கள் எந்த ஒரு சிறு பண்டிகையானாலும், சரி ஒரு பூஜையானாலும் சரி ஈடுபாட்டுடன் கொண்டாடுவதில் இருந்து பண்டிகை என்பதே மகிழ்ச்சியாக இருப்பதற்காக என்பது தெரியவருகிறது.

நேற்று ஹரியாலி தீஜ் முன்னிட்டு குடியிருப்புப் பகுதியில் உள்ள தோட்டத்து வேப்ப மரத்தில் கட்டப்பட்ட கயிற்று ஊஞ்சலில் இங்கு உள்ள தோழமைகளோடு இணைந்து ஆடும் அனுபவம் எனக்கும் கிட்டியது. ஊஞ்சல் ஆடும்போது பள்ளிப்பருவத்தில் தோழிகளுடன் வீட்டு கருவேளமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடிய நெஞ்சைவிட்டு நீங்காத பல நினைவுகளும் வந்து என்னை பள்ளிப்பருவத்திற்கே அழைத்து சென்றது.

எந்த வயதிலும் நம்மைக் குழந்தையாய் உணரவைக்கும் எந்த ஒரு பண்டிகையும் வரவேற்கத்தக்கதே. தேவையில்லாத சர்ச்சைகள், இது தேவையா என்று இல்லாமல் பண்டிகை நம்மையும், நம்மை சுற்றியிருப்போரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும் எனில் எந்த ஒரு பண்டிகையையும் கொண்டாடுவதில் தவறில்லை என்பதை உணரவைத்தது நேற்றைய நிகழ்வுகள். முடிந்தவரை நாமும் மகிழ்ச்சியாக இருந்து நம்மை சுற்றியிருப்போரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்போம்..

Thursday 8 August 2013

முரண்...

சிரிப்பில் ஒளிந்திருக்கும்
அழுகை..
அழுகையில் ஒளிந்திருக்கும்
சிரிப்பு..
அன்பில் ஒளிந்திருக்கும்
கயமை...
இரக்கத்தில் ஒளிந்திருக்கும்
ஏளனம்...
கோபத்தில் ஒளிந்திருக்கும்
அன்பு...
சகிப்புத்தன்மையில் ஒளிந்திருக்கும்
வெறுப்பு...

மகிழ்ச்சியில் ஒளிந்திருக்கும்
சோகம்..
பசியில் ஒளிந்திருக்கும்
வறுமை...
பணத்தில் ஒளிந்திருக்கும்
கருணை...
நட்பில் ஒளிந்திருக்கும்
விரோதம்..
பாசத்தில் ஒளிந்திருக்கும்
சூழ்ச்சி...
உறவில் ஒளிந்திருக்கும்
பகைமை...

உதவியில் ஒளிந்திருக்கும்
எதிர்பார்ப்பு...
நம்பிக்கையில் ஒளிந்திருக்கும்
சந்தேகம்...
முரண்கள் அனைத்தையும்
முடிவின்றி கற்கின்றோம்..!!

Tuesday 6 August 2013

ஆறாத காயங்கள்..!!

ஆறிப்போனதாய்
எண்ணிய காயங்கள் 
நமைச்சலினால்
உயிர்பெற்று
இரத்தக்கசிவுடன் வலி
ஏற்படுத்துவதுபோல்...

மறக்கப்பட்டதாய்
நினைக்கப்படும்
மனக்காயங்கள்...
ஆங்காங்கு
எங்கோ நிகழும்
ஏதோ நிகழ்வுகள்
எதையோ நினைவூட்ட..
மற(த்த)ந்த உணர்வுகள்
உயிர்பெற்று
காய்ந்ததாய்
கருதப்பட்ட
மனக்காயங்களுக்கு
புத்துயிரளித்து
புதுப்பொலிவுடன்
புதியதோர் காயத்தையளித்து
மாயத்தை ஏற்படுத்தும்
நிகழ்காலம்.......!!



Monday 5 August 2013

பொய் பயிர்...!!

எங்கோ
யாராலோ
அவரவருக்கான 
பொய்கள் 
அறுவடைக்கான நேரம் 
அறிவிக்கப்ப(டுத்தப்ப)டாமல்
விதைக்கப்படுகிறது..

விளைச்சல்
வீடு வர மகசூல் கண்டு
விதைக்கப்பட்ட
பொய்விதையின் தரம் நினைத்து
மகிழ்வதில்லை - மனம்
உணர்ச்சிப்போராட்டத்தின்
உச்சத்தில்
கொந்தளிப்பே எச்சமாய்......!!

Sunday 4 August 2013

தூரிகை காயத்ரியின் - நன்றி _/\_

அன்புத்தோழமைகளுக்கு, மனமார்ந்த மாலை வணக்கம்.  


இன்றுடன் வலைச்சரத்தில் எமது பொறுப்பாசிரியர் காலம் முடிவடைவதால் நன்றி கூறித் தங்களிடமிருந்து விடைபெறுகிறேன். எழுத்துலகில் எழுத்தாணியை சரிவரப் பிடிக்கக்கூட கற்காத என்னையும் அழைத்து இந்த மலர்த்தோட்டத்தில் இளைப்பாற இடமளித்த அன்பின் சீனா ஐயா அவர்களுக்கும், இத்துனை நாளும் எமது அரட்டைகளைப் பொறுமையாகப் படித்ததோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து ஊக்கம் அளித்துவரும் எனதன்புத் தோழமைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  

இந்த வலைச்சரத்தில், ஆங்காங்கே பூத்திருக்கும் எண்ணற்ற மலர்கள் அனைத்தையும் கோர்ப்பதற்கு இயலாது என்பதை அனைவரும் அறிவோம். விடுபட்ட மலர்கள் எமது கண்களுக்கும், எம் காலத்திற்கும் சிக்காது போனதுதான் காரணமே தவிர மலர்களின் மணத்திலோ, அழகிலோ எந்தக்குறையுமில்லை.  

வலைச்சரத்தில் கோர்க்கப்படாது விடுபட்டு, எமது தோழமைகளால் சரத்தை அலங்கரிக்கக் காத்திருக்கும் அனைத்து மலர்களுக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்.  அந்த மலர்களைக் கொண்டு வலைச்சரத்தை அலங்கரிக்கக் காத்திருக்கும் தோழமைகளுக்கு பாராட்டுக்கள்.  

இந்த வாரம் தூரிகை கண்டெடுத்த முத்துக்கள் அனைத்தும் தொடர்ந்து ஒளிவீசிக்கொண்டிருக்க இறைவேண்டி வாழ்த்துகிறேன்.

தன் சிந்தனைச் சிதறல்களால்  இந்த வலைச்சரத்தை அலங்கரிக்கவிருக்கும் அடுத்த பொறுப்பாசிரியரை மனமார வாழ்த்தி வரவேற்கிறேன்.  தங்கள் அனைவருடைய அன்பிற்கும் நன்றி.அன்பை அரிதாரமாய்ப் பூசாமல் அன்பை உணர்ந்து உணர்த்துவோம்.  எங்கும் அன்பு தழைக்கட்டும்.  வாழ்க வளமுடன்._/\_

முரண்பட்ட சிந்தனைகள் - தொடர்ச்சி...

வார்த்தைகளால் கொல்லும் மனம்..
வார்த்தைகளால் கொள்ளும் மனம்..

*****

வார்த்தையால் ஏற்படும் காயங்களுக்கு 
   மௌனத்தால் மருந்திடும் மனம்.

மௌனத்தால் ஏற்படும் காயங்களுக்கு 
   வார்த்தையால் மருந்திடும் மனம்.

*****

தன் உணர்விற்கு மதிப்பளித்து..

  பிறர் உணர்வை எரிக்கும் மனம்..


பிறர் உணர்விற்கு மதிப்பளித்து

  தன் உணர்வை எரித்துக்கொள்ளும் மனம்..

*****

அன்பை மறைத்து கோபத்தை வெளிக்காட்டும் மனம்..

கோபத்தை உள்ளடக்கி அன்பை வெளிக்காட்டும் மனம்..

*****

சோகத்திலும் மகிழ்ச்சியைப் பிரதிபளிக்கும்  மனம்..

மகிழ்ச்சியிலும் சோகத்தையே பிரதிபளிக்கும்  மனம்..

*****



தூரிகை கண்ட முத்துக்கள் - நாள் 6


தோழமைகள் அனைவருக்கும் இனிய நண்பர்கள்தின வாழ்த்துக்கள். 

காயத்ரி  : வாங்க விசு சார்..வணக்கம்

விசு        : வணக்கம்மா.. இன்னியோட வலைச்சரத்தில் என் பொறுப்பு முடியுதா..?

காயத்ரி  : ஆமா சார்.  இன்னிக்கு நண்பகள் தினத்தை முன்னிட்டு  நம்ம வலைச்சர மலர்த்தோழமைகள் அனைவருக்கும் சிறப்புப்பரிசு இது....:) (இன்னிலேர்ந்து கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க..)

விசு        :நம்ம அன்பின் சீனா ஐயா  இறுதிப் பதிவை வழங்க சரியான நாள்தான் கொடுத்திருக்கார்...நம்மப் பத்திமுன்னாடியே அவருக்குத் தெரிஞ்சிருக்குமோ...?!!

காயத்ரி  : ம்ம்... சார் இன்றைய மலர்களை அறிமுகப்படுத்தும் முன்பு நண்பர்கள் தினத்துக்கு நீங்க ஏதாச்சும் சொல்லனும்னா சொல்லுங்களேன்...ஆவலா இருப்பாங்க நம்ம தோழமைகள்..

விசு       : ஏம்மா, தினமும் என் பாணிலதான் சொல்றமே...இன்னிக்கு ஒரு மாறுதலுக்கு உன் பாணில காயத்ரியா ஏதாச்சும் சொல்லும்மா..நானும் கேட்கறேன்..

காயத்ரி : பாவம் சார் நீங்க.. என் கருத்துக்களையும் கேட்கனும்னு ஆவலா இருக்கீங்களே..!! 

அன்பெனும் அரிதாரம் பூசாது...
தோல்வியில் துவண்டு
துயரத்தில் மூழ்கியிருக்கும்
தோழமைகளுக்கு
கர்ணனின் கவசகுண்டலமாய்
அன்பையணிந்து
உள்ளத்தால் உணர்ந்து
உணர்வால் உணர்த்தி
உடனிருந்து 
தோழமைக்கு தோள்கொடுப்பதே நட்பு..இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள். 

விசு      : எங்க என்னமாதிரியே  நட்பென்பது நட்பெனும் சொல்லில் இல்லை. நட்பை நட்பாக உணர்வதில் இருக்குனு ஏதாவது சொல்லிடுவியோனு நினைச்சேன்மா...நல்லவேள உன்பாணிலயே சொல்லிட்ட. என் சார்பாகவும் நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.  சரிம்மா அறிமுகத்துக்கு போகலாமா..

காயத்ரி : போகலாம் சார்.  முதல் பதிவரே குளிர்ச்சியான ஒரு அறிமுகம் சார்..

விசு       : என்னம்மா குளிர்ச்சி...ஏதாவது வில்லங்கமா மாட்டிவிடமாட்டியே..?

காயத்ரி : அட என்ன சார்..நம்ம வலைச்சரத்துல உங்களைப்போய் மாட்டிவிடுவேனா....? இவரு நொய்யல் ஆற்றை பாதுகாப்பது பற்றி தன்னோட வலைப்பூவில் எழுதியிருக்கார் அதான் ஆறுன்னதுமே குளிர்ச்சியா உணர்ந்தேன்..

விசு       : இரும்மா நானும் படிச்சுப்பார்க்கறேன்..

கோயம்புத்தூர் நகரை கடக்கும்போது நகரின் கழிவுகளும், திருப்பூரை கடக்கும்போது அந்நகரின் சுத்திகரிக்கப்படாத சாயப்பட்டறைகளின் கழிவுகளும் கலந்து நொய்யல் ஆற்றை  மாசுபடச்செய்கின்றன.  நொய்யல் பாதுகாப்பு அமைப்பு (பதிவர் பற்றிய விபரங்கள் பகிரப்படவில்லை) என்ற  தளத்தில் நொய்யல் ஆற்றைப் பாதுகாப்பது எப்படி...?
மழை நீர் சேகரிப்பு என  நீர் சேமிப்பு, நீர் மாசுபடுதல் போன்ற பதிவுகளாகப் பகிர்ந்துள்ளார். 
//காலத்துக்குக் காலம் இயற்கையைப் பார்க்கும் பார்வை மாறி மாறி வந்தாலும், மாற்றம் ஏதுமின்றியே இருக்கிறது இயற்கை!
மனித அறிவு எவ்வளவு குறுகலானது என்பதை வெளிச்சம் போட்டதைத் தவிர நவீன அறிவியல் வேறெதையும் சாதிக்கவில்லை.//
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள். தலைப்பே வித்தியாசமா இருக்கு இல்ல..ஏன் பொண்ணு கொடுக்க மாட்டேங்குறாங்களாம்..வாங்க பார்ப்போம். 
அவசியம் அனைவரும் படித்து உணரவேண்டிய பதிவாத்தான் எனக்கும் தோணுதும்மா.  இதுபோன்ற விழிப்புணர்வூட்டும் பதிவுகள் தொடர பதிவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

காயத்ரி
 அடுத்த பதிவர்.. இணையத்தில் ஒரு பிரபளம் சார். நம்ம திண்டுக்கல் தனபாலன் சகோதரர் மாதிரியே இவருக்கும் அறிமுகம் தேவை இல்லை..இருந்தாலும் திரும்ப நாம அறிமுகப்படுத்தும்போது இவரையும்இவரது வலைப்பூவையும் அறிந்திருந்தாலும் இதுவரை படிக்காதவங்க படிச்சு அறியவேண்டியதை அறிவாங்க என்ற எண்ணத்தில்தான் இவரையும் இன்று சேர்த்திருக்கிறேன்.

விசு       : என்னமா பீடிகையே பலமா இருக்கு..

காயத்ரி : நீங்களே இவரைப்பற்றியும்இவரோட தளத்தையும் படிச்சுப்பாருங்க சார்..உங்கள்ளுத் தெரியும்.
நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேரான ஈரோடு கதிர் அவர்களின் கசியும் மௌனம் தளத்தில் கவிதைகட்டுரைவிமர்சனம்விவசாயம்சிறுகதைகள் என பல்வகைப்பதிவுகள் கொடுத்து அனைவரையும் அசத்திவருகிறார்.  இவரை வலைப்பதிவுலகில் அறியாதவர்கள் மிகக்குறைவே எனினும்புதிதாக இணைந்திருக்கும் பலருக்கு பயனுள்ளதாக இருக்குமென்பதாலும்எம்மைக்கவர்ந்த வலைப்பூக்களில் இவரது கசியும் மௌனமும் ஒன்று என்பதாலும் அறிமுகப்படுத்துகிறேன். தலையை விட வால்தான் அதிகம் ஆடுகிறது..!!  இதில் பல துணுக்குகள் நகைச்சுவையாய் பகிர்ந்துள்ளார். நகைச்சுவைத் தோற்றத்தில் காணப்படும் உண்மைகளாய் திகழ்கின்றன..
//எதைச் சொன்னாலும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருப்பதுபோல்எதைச் சொன்னாலும்நம்பாததற்கும் ஒரு கூட்டம் இருப்பதுதான் உலகின் 
விந்தை! //
//சில விசயங்கள் புரிபடாமலே இருப்பதற்குஅது குறித்த ’எதிர்ப்பு’ 
மனோநிலையும்காரணமாக இருக்கலாம்.//

எங்கு மழைப்பெய்திடினும் நம் ஊரின் மீதான பாசத்தில்நம்ம ஊரிலும் மழைப்பெய்திருக்குமா என்ற எண்ணத்தையே ஏற்படுத்த வைக்கும்.  அதுபோலத்தான்  இவர்கூட தன்னுடை மனசும் தழையும் மழையில்.. பதிவில் நம்ம ஊரிலும் மழை பெய்திருக்குமான்னு நடுசாமத்தில் ஊரில் இருக்கும் தாத்தாவை அழைத்துக் கேட்கலாமா என எண்ணிக்கொண்டிருக்கிறார். தொடர்ந்த அவரின் எண்ணங்களை அறிய மேற்கொண்டு படிப்போம் வாங்க. :)
//காலையில் எழுந்து கைபேசியில் ஃபேஸ்புக்கைப் பார்க்க எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊர்ப்பெண் “ Its raining after 5 mnths... Thank GOD”  எனத் தகவல் இட்டிருந்தார். நேரத்தைப் பார்த்தேன்இரவு 10 மணி எனக் காட்டியது. மனசில் மழை பெய்தது போலிருந்தது.//

விசு: யதார்த்தமா மண்ணின் மணத்தை மணமாய் மனதால் வழங்கியிருக்கிறார். தோழர் ஈரோடு கதிர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
***
காயத்ரி :   சாப்பாடே வாழ்க்கையென சிலர்...வாழ்க்கையே சாப்பாடு என சிலர்...சுவைத்து உண்பவர் சிலர்..உண்பதற்காக உண்ணவேண்டுமே என சிலர்..

விசு     : இதை ஏன்மா இப்ப சொல்ற..??!!

காயத்ரி: இப்ப நீங்க அறிமுகப்படுத்தப்போகும்    Asiya Omar அவர்களின் சமைத்து அசத்தலாம்..  வலைப்பூவில் அனுபவம் பேசுகிறதுவ்கை வகையான உணவு வகைகள் என வலைப்பூவின் பெயர் போலவே அசத்தியிருக்காங்க.

மிகவும் எளிமையான வெஜ் ஓட்ஸ் கிச்சடி ஓட்ஸ் தேங்காய் லட்டு என பலவகைப் பதார்த்தங்களைப் பகிர்ந்து உடனே செய்துபார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது இவரது பதிவுகள்.  செய்து பாருங்க..(ஆனா முதல் சோதனை நீங்கதான் யாரையும் சாப்பிட்டுப்பார்க்க சொல்லி வம்பு செய்யக்கூடாது) அது மட்டுமா எங்க வீட்டு பத்மினியும்தோட்டமும்... அவங்க வீட்டு பத்மினியப்பற்றி என்னமா பெருமையா பேசிக்கிறாங்க..யாருங்க அந்த பத்மினி அவளையும் பார்த்துட்டு வருவோமே அவங்க வீட்டுக்குப்போகலாம் வாங்க..

விசு    : அட ஆமாம்மா.. இதையெல்லாம் இப்பவே சாப்பிடனும்போல இருக்கே...நான் எப்படிம்மா மேற்கொண்டு அறிமுகப்படுத்துவேன்...

காயத்ரி : இதைப்பார்த்ததும்எனக்கு சம்சாரம் மின்சாரதுல நீங்க உங்க மனைவி கோதாவரிகிட்ட காஃபி எப்படி செய்யனும்கேசரி எப்படி செய்யனும்னு சொல்வீங்களே அதைக்கேட்டவுடனே நாங்க  சாப்பிட ஹோட்டலுக்கு எழுந்து போயிடாம படம் பார்த்தோமே அந்த நினைவுதான் சார்...:)

விசு    : தோழமை Asiya Omar அவர்களின் பசித்தூண்டும் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள். 

விசு    : உங்க அளவிற்கெல்லாம் எனக்கு பொறுமை இல்லம்மா. நான் தம்பி கில்லாடிக்கிறுக்கனும்ராகவன் தளத்தையும் அடுத்தடுத்து அறிமுகப்படுத்திட்டு கிளம்பறேன்..நண்பர்கள் தினம் கொண்டாடுவது அவசியமான்னு ஒரு பட்டிமன்றம் போகனும்..அதோட காஃபி குடிக்கனும்னு நீயே நினைவு படுத்திட்ட..

காயத்ரி :நானேதான் வாயக்கொடுத்து உங்கள விரட்டிட்டேனா..?!

விசு    : கில்லாடிக்கிறுக்கன் கலைச்செல்வன் என்றபெயரில் எழுதிவரும் வலைத்தளத்தில் சின்ன சின்ன சிந்தனைகளை சிந்திக்கும்படி வழங்கியிருக்கிறார்.  இந்த சின்னவயதில் இவருக்குள் இவ்வளவு திறமையா என வியக்கும் வகையில் சமூகசிந்தனை சற்றே கூடியிருக்கும் இவரது பதிவுகளில்.
//சங்கூதப் போன இடத்திலே
சங்கூதிட்டாங்க
குத்தாட்டம் போட்ட இடத்திலே
குத்திட்டாங்க
புதைக்கப்போன இடத்திலே
எரிச்சிட்டாங்க
உடலை எரிக்க
போனவங்க
ஊரையே எரிச்சு
வந்தாங்க
என்னமோ குல வழக்கமாம்...//
இதுபோன்ற சிந்தனைகள் சிதறியிருக்கும் அவர் தளம் செல்வோம்.
தம்பி கில்லாடிக்கிறுக்கனின் சமூக சிந்தனை விதைகள் தொடர்ந்து முளைத்துத் தோட்டமாய் மாறிட வாழ்த்துக்கள்.
 *********
 ராகவன் வலைத்தளத்தில் இசைசிறுகதைஅனுபவக்கதைகவிதைகள் நினைவலைகள் என்று பலவிதமான பதிவுகளும் பதிந்திருக்கிறார்.  இவரது கதைகள் உயிர்ப்புடன் கதை மாந்தர்கள் பேசுவதைவிட கதையே பேசுவதை நம்மால் காண இயலும். இவரின் சிறுகதையான பரிவர்த்தனை யில் "பத்தர் கடை விவரணைகள் இயல்பான எழுத்து நடையில் மண்ணின் மணம் வீசச்செய்திருக்கிறார்.
பகலில் மிச்சம் இருக்கிற இரவு என்ற பதிவில் இவர் கூறியிருக்கும் கருத்துக்களை பலரும் உணர்ந்து அனுபவித்திருப்பார்கள் என்றே கருதுகிறேன்.

//அதுவாய் வந்து விழும் வார்த்தைகள் சில சமயம் ஞாபகத்தின் அலமாரிக்குள் குடையும் போது வந்து விழுகிறது கவிதைகள் அதன் மேல் படிந்து போன தூசிகளுடன். ///
 //தொடர்ந்து எழுதுகிறேன் பன்படுமா என்று பார்க்கலாம்...கால் பதிந்து பதிந்து வழுக்கலான பாறைகளில் ரேகைகள் இன்னும் மிச்சமிருக்கின்றன,.. // 
நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.  மண்ணின் மணம் தொடர்ந்து மணக்கட்டும். 

காயத்ரி : என்னுடைய அழைப்பை ஏற்று இத்துனை நாளும் உங்க பணிகளுக்கு இடையில் நேரம் ஒதுக்கி வலைச்சரம் வந்தமைக்கு வலைச்சர மலர்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் விசு சார்.

விசு    : ரொம்ப மகிழ்ச்சிம்மா..எனக்கும் பல்வேறுபட்டத் தளங்களை அறிய வாய்ப்பு கிடைத்தது.  எப்பவும் மேடைப்பேச்சு,சினிமாநாடகம்னு இருந்துட்டு ஒரு வித்தியாசமான அனுபவம்.   இத்துனை நாள் நம்ம அரட்டையைப் பொறுமையா சகிச்சுக்கிட்டு இருந்த வலைச்சர தோழமைகளுக்கும்உனக்கு வாய்ப்பளித்து அதன்மூலம் எனக்கு வாய்ப்பு கிடைக்க காரணமாயிருந்த அன்பின் சீனா ஐயாவிற்கும் நன்றிகள். அறிமுகமாகும் அனைத்து தோழமைகளின் எழுத்துக்கள் எண்ணற்று வெளிவர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

காயத்ரி  : தங்கள் வருகைக்கும்வாழ்த்திற்கும் மிக்க நன்றி சார். தோழமைகளுக்கும் மனமார்ந்த நன்றிகளும்வாழ்த்துகளும்.  _/\_
***
எமது பதிவுகளை சற்றே மாறுபட்ட கோணத்தில் வழங்கிடவே இப்படிப்பட்ட ஒரு  முயற்சி.    இந்தப்பதிவுகள் மூலம் எவரையும் காயப்படுத்தும் எண்ணம் இல்லை.  அறியாது எவர் மனமேனும் வருந்துவதற்குக் காரணமாயிருப்பின் மன்னிக்கவேண்டுகிறேன்.