முகப்பு...

Tuesday 25 October 2011

தீபாவளி நோம்பி....




பூலோகத்தில் தீபத் திருநாளாம்..


விண்மீன்களும் வானவில்லும்...
விருந்தினர்களாய்....


வண்ண விளக்குகள்
மரங்களில் கனிகளாய்...


வீடெங்கும் பூமகள்
வண்ணக் கோலங்களாய்...


ஊரெங்கும் பட்டாசுகள் இடிகளாய்
புகை மேகமூட்டமாய் சூழ..


தெருவெல்லாம்  பிரகாசிக்கும்
வண்ண விளக்குகள்
வானத்து நிலவை கூச வைக்க....


நட்சத்திர விடுதியில்
நாளெல்லாம் கொண்டாட்டமாம்


இங்கு நலிந்தோர் வீட்டில்
உணவிற்கு திண்டாட்டமாம்..


சிறுபிஞ்சுகளின் உழைப்பு
தெருவெங்கும் கருகிய காகிதமாய்..


வீட்டில் எஞ்சியது கூட
கொட்டாமல் கொடுத்தால்..
ஏழைக்கு உணவாகும்..

விருந்துக்கு வந்தவர்கள்
விதைத்து விட்டுச்சென்றது.,


வண்ண வண்ண  காகிதங்களும்.
பட்டாசுச் சாம்பலும்
பலவண்ணக் குப்பைகளுமே...


தீபத்திருநாளாம் இன்று...
தீபத்தை ஏற்றியே வழிபடுவது நன்று..

Saturday 22 October 2011

நூலகம்....!!





எம் சிந்தனைகளை கிறுக்கல்களாய் வெளிப்படுத்தும் முயற்சி...:)



விரயமாகும் நேரம் எண்ணி 
வேதனையுடன் ஆண்டவனை வேண்டி நிற்க..

பொக்கிமாய் புத்தகங்கள் பலவுண்டு 
படித்து நீயும் பக்குவமடை என்றே
அறிமுகப்படுத்தினான் 
அரியதொரு நூலகத்தை...!

ஆன்மீகம்விஞ்ஞானம்மெய்ஞானம்..
மருத்துவமும் அறியலாம்.. 
கவிதையு, கட்டுரைகதையென 
பல தகவல்கள் கிடைக்கு மிங்கே...
சுவாசமறியவும்சுயமறியவும் - தூண்டும்.
மகத்துவம் வாய்ந்த புத்தகமும் உண்டு.. 
படித்தால் நீ ஞானியுமாகலாம்..!
பார்ப்பதற்கே காலமில்லை 
அத்தனையும் படிப்பதெங்கே..?
என் மனம் பண்படுவ தெப்போது.. !! ?
புத்தகங்களைப் புரட்ட புரட்ட..,
மனமும் எள்ளி நகைத்தது எனை நோக்கி..
அரிய பல நூல்கள் இருக்கு இங்கே..
நீ அறிய விரும்புவது எது வென வினவ..
எனக்குத் தேவை எதுவென அறிய..
வாசகர்களை வரவழைக்கும் நூலகமே..
நீயே விளக்கு..என் குழப்பத்தை விலக்கு..!
நூலகம் என்னிடம் 
நூறு வகை நூல்கள் உண்டு..
உன்னையறி.. உன் விருப்பமறி.. என உரைக்க..
நூலகமாய் இருந்திடத்தான் ஆசையெனக்கு
ஆனால்......
நூறு வகை புத்தகத்தைக்கூட படித்திராத
நான் எப்படி.............??!!

சரி..
நூலகமாய் வேண்டாம்..
ஒரு நூலாகவாவது இருக்கலாமே...?
இதுவும் பேராசைதான் உள்ளம் அறிவுறுத்த..
நூலாக வேண்டாம்..
ஒரு நூலையாவது  படிக்க எண்ணி..
கவிதையெனும் புத்தகமொன்றைக் கையிலெடுத்தேன்..
உன்னால் முடியும் படியென.,
குறுநகை புரிந்தது நூலகம்...
கவிதையை அறிந்திட எண்ணி
புத்தகத்தைப் புரட்ட புரட்ட...
முழுவதும் படித்து முடிப்பதற்குள்ளேயே..
சிந்தனைச் சிறகுகள் வெட்டப்பட்டு..
எதுகை,மோனை
உவமான, உவமேயம் ஏதுமின்றி
முற்றுப் பெறுகிறது கவிதை...
முடிவறியாமலேயே....!
புத்தகத்தை முழுமையாய் அறிந்திடமுடியா சோகத்தில் நான்...!
ஒரு புத்தகம் கூட முழுமையாய் படிக்காதவரை..
வாசகியாய் அடைந்த சோகத்தில் நூலகம்..

தன்னிடமுள்ள நூல்களை பலரும்
படித்துப் பயனடைய வேண்டுமென..
விருப்பமுள்ள வாசகனுக்காய் 
வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறது
நூலகம்...!
அடுத்தப் பிறவியிலேனும்
பொக்கிமான நூலகத்தில்..
புத்தகமாய் இருப்பேனா...?  
புத்தகத்தை முழுவதுமாய் படிப்பேனா ..??
ஏக்கமுடன் நான்....!

Sunday 16 October 2011

ஏனோ....?



ஈருடல் ஓருயிராய்  இருப்போமென உறுதி கூறி..
என் சித்தம் கலங்கடித்து.,
சிவனேயென,
உட்கார்ந்து சித்தாந்தம் பேசும் நீ,

ஓருடல் ஈருயிராய் நான்..
உன்னை மறக்கவும் முடியாமல்..நினைக்கவும் முடியாமல்..
தடுமாறும் என் சித்தம் கலங்கும் முன்...
சிவனேயென இருந்திருக்கக் கூடாதா??

என் மனதை.,
கிழித்துக் காயபடுத்தும் கத்தியை
அனைவரிடமும்
கொடுத்த கடவுள்,
உன்னிடம் மட்டும்
கொடுக்கத் தவறி இருப்பாரா என்ன..??

தினமும் வெட்டுப்பட்டு.,
இனி வெட்டுப்பட வேண்டாமென
பட்டுப்போய் விறகாகி விட்டோம் என,
நிம்மதியாய் இருக்க.....
எரிக்க வேண்டிய என்னை...

தண்ணீர் ஊற்றி
துளிர்க்கச் செய்த பின்..
வேருக்கு திராவகம் ஊற்றி எரிப்பது ஏனோ??

Wednesday 12 October 2011

அரைகுறை அறிவு..


என்னைக் கண்டு விமானம் படைத்தவனும் நீ..
அதில் வரும் விமானிகளை கைதிகளாய் பிடிப்பவனும் நீ..

எல்லையில்லா தூரத்தை அடைய நினைக்கும்.,
என்னைக் கூண்டில் அடைத்து வேடிக்கை பார்ப்பவனும்  நீ...

இரயிலைக் கண்டவனும் நீ..
அதை வெடி வைத்துத் தகர்ப்பவனும் நீ..

பேருந்தைக் கண்டவனும் நீ..
அதை எறிப்பவனும் நீ..

மரத்தை நட்டவனும் நீ..
அதை வெட்டுபவனும் நீ..
அதன் அருமையை உணர்த்துபவனும் நீ...

ஆடம்பர பொருட்களை அறிமுகப்படுத்தியதும்  நீ..
அதன் ஆபத்தை விளக்குபவனும் நீ..

ஊழலைக் கண்டவனும் நீ..
அதை தடுக்க நினைப்பவனும் நீ...

இயற்கையை மாசு படுத்துவதும் நீ..
அதை காக்கச் சொல்வதும் நீ..

நோய்கள் தோன்றக் காரணமும் நீ..
அதை குணப்படுத்தும் மருந்தைக் கண்டு பிடிப்பவனும்  நீ..

நல்லது கெட்டது இரண்டையும் கண்ட நீ
நீரற்ற பாலை அருந்தும் அன்னமாய்...
நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளும் அறிவற்று இருப்பது ஏனோ..?







Monday 10 October 2011

"நிழலாகிய நிசங்கள்"


அவளறியா வேளையில்,
அவளையடைந்து அவளுணர்ந்த காதலை,

அவனுக்குணர்த்த நாணமுற்று,
மனதினில் மறைத்து.,

அலைபேசி அழைக்கும்போதெல்லாம்,
அவனாக இருக்குமென,
அடிக்கொருதரம் பார்த்து ஏங்கும் மனம்..

அவனிடம் பேசுவதாக,
அவளுக்குள் இருக்கும் அவனிடம் அவளே பேசி,
சிரித்து மகிழ்ந்து, சண்டையிட்டு...
அவளுக்குள்ளே வாழ்கிறாள்...

மனதினுள் மருகி இருதலைக்கொள்ளி எறும்பாய்.,
பரிதவித்த பெண்ணின் மனம் யாரறிவார்?

நெஞ்சில் உள்ளவன் நெறிஞ்சி முள்ளாய் உறுத்த,
நிமிடமும் நெருப்பாய் சுடுகிறது...
அவன் பாராமுகம் காட்டும்போது.

சுட்டெரிக்கும் சூரியனும் குளிர்கிறது....
உள்ளிருக்கும் அவனை நினைக்கையில்.

அவனை எண்ணி,
அவள் உறங்கா நாட்களை,
அந்த நிலாத் தோழியும் கூறுவாளே..!

காதல் கொண்டவனை கட்டியணைக்க,
நீருக்கு ஏங்கும் நெற்பயிராக மனது.
மனதிற்கும், கலாச்சாரத்திற்கும் போராட்டம்.,
வென்றது அவள் கலாச்சாரம்...

கலாசாரத்தைக் காப்பாற்றிக்
கண்ணீரை தனதாக்கி,
அவளுக்குள் உதயமான காதல்
அவளுக்குள்ளேயே அஸ்தமனமும் ஆகிறது..

நிசமான காதலும் இங்கே
நிழலாகிக் கனவாகிறது....

Saturday 1 October 2011

மருத்துவமனை....






ஆழ்மனத்தின் அமைதியை அமைதியாய்
அமர்ந்து மனம் தேடுகிறது..



மனம் விரும்பும் மனதை மனம் அருகில் 
கொணர நினைக்குமிடம்..

கண்ணுக்குத் தாயாய் காட்சியளிக்கும்
செவிலித்தாய்..

காக்கும் கடவுளாய்த் தோன்றும்
மருத்துவர்..

சொட்டு சொட்டாய் உயிர்த்தண்ணி
உணவாய்..

எமனின் பாசக்கயிறா? ஈசனின் காக்கும் கயிறா?
என அஞ்சத்தோன்றும் மருத்துவரின்
இதயத்துடிப்பு மானி ?! 

இறைவனை அடைவோமா இல்லை இல்லத்தை அடைவோமா??
வினவும் மனம்..

எம்மதமும் சம்மதம் என எண்ண வைக்கும் நேரம் அது.
அங்கே முகமறியாதவனின் குருதி தனக்கேறும் சமயம்..



சொர்க்கத்தையும், நரகத்தையும் 
ஒரு சேர பார்க்க நேருமிடம்..

மனதை  மனம் இனங்காணும் இடமிது..


அவன் பணம் காய்க்கும் மரமாய் விளங்குமிடம்
மருத்துவர்களுக்கு..

இங்கு தேவை பணமா? மனமா?
எழுகிறது வினா..

பணத்துடன் கூடிய மனம், மனதுடன் கூடிய பணம்..
இரண்டுமே தேவைப்படுமிடம்..

பணமட்டுமே வாழ்வில்லை என உணரவைக்கும் போதிமரம் அது
நோயாளிக்கு மட்டும்..!!!